Wednesday, July 24, 2013

சாக்லேட் மூஸ்


தேவையான பொருட்கள்

சாக்லேட்சிப்ஸ்(அ) பார்   - 80 கிராம்
பட்டர்                                       - 1 தேக்கரண்டி
முட்டை                                  -  1
திக் க்ரீம்                                 -  120 மிலி
சீனி                                           -  2 ஸ்பூன்

செய்முறை


ஒரு அகன்ற பாத்திரத்தில் சாக்லேட் பாரை உடைத்து போட்டு அதனோடு பட்டரை சேர்த்து வைத்துக்கொள்ளவும்.அடுப்பில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொஞ்சம் வத்து கொதிக்க விட்டு அடுப்பை சிம்மில் வைத்து அதன் மேல் இந்த சாக்லேட் உள்ள பாத்திரத்தை வைத்து சூடு படுத்தவும்.உடனே சூடேறியதும் சாக்லேட் எல்லாம் உருக ஆரம்பிக்கும் போது அந்த பாத்திரத்தை வெளியில் எடுத்து நன்கு கிளறி விடவும் திரி திரியாக ஆனதென்றால் ஒரு சில துளிகள் தண்ணீர் தெளித்து கிளறி மறுபடியும் அந்த கொதிநீர் பாத்திரத்தின் மேல் வைத்து நன்கு ஒன்று சேர கிளறவும் ஒன்று சேர்ந்து இளகி இருக்க வேண்டும்.அதன் பின் இறக்கி வைத்து விடவும்.(அதிக நேரம் கொதிநீர் பாத்திரத்தின் மேலேயே வைத்திருக்க கூடாது.)


ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைகருவை தனியே ஊற்றி விட்டு மஞ்சள் கருவை இந்த சாக்லேட் வெதுவெதுப்பாக இருக்கும் போது சேர்க்கவும்.சாக்லேட்டோடு மஞ்சள் நன்கு ஒன்று சேர ஸ்பூனால் நன்கு அடித்து கலக்கி வைக்கவும்.வெள்ளை கருவை தனியே நன்கு நொரை பொங்க கிரீம் போல் அடித்து வைத்துக்கொள்ளவும்.(எலக்ட்ரிக் பீட்டர் இருந்தால் க்ரீம் போல் வெள்ளை கரு அடிக்க வரும்.என்னிடம் இல்லாததால் கை பீட்டரால் தான் அடித்தேன் எனவே மிகவும் க்ரீமியாக வரவில்லை.)


மற்றொரு பாத்திரத்தில் திக்கான க்ரீமை ஊற்றி அதில் சீனியை சேர்த்து நன்கு பீட்டரால் கை விடாமல் அடிக்கவும் கெட்டியான க்ரீமாக ஆகிவிடும்.ஸ்பூனால் எடுத்து போடுவது போல் திக்காக ஆகவேண்டும்.


இப்பொழுது சாக்லேட் கலவை மேல் நன்கு அடித்து வைத்திருக்கும் இந்த வெள்ளை கருவை சேர்த்து மெதுவாக கலந்து விடவும்.அதன் பின் அந்த க்ரீமையும் சேர்த்து மெதுவாக ஒன்று சேர கிளறவும்.


அதன்பிறகு இரண்டு கப்களில் அதை ஊற்றி ஃப்ரீசரில் 4 அல்லது 5 மணிநேரம் வைத்து விடவும்.சாப்பிடும் முன்பாக வெளியில் எடுத்து க்ரீமை சீனி சேர்த்து அடித்தோம் அல்லவா அதே போல் கொஞ்சம் அடித்து அதை இந்த மூஸ் மேல் ஒரு ஸூன் வைத்து அதன் மேல் சாக்லேட்ஸை துருவி தூவி அலங்கரித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.விரும்பி சாப்பிடுவார்கள்.இல்லையென்றால் இரண்டு மணிநேரத்திற்க்கு பிறகு  இப்படி அலங்கரித்து மீண்டும் வைத்து விட்டு செட் ஆனதும் கொடுக்கலாம்.5 மணிநேரம் முழுமை அடைந்தால் நன்கு திக்காக சாப்பிட நன்றாக இருக்கும்.பெரியவர்களுக்கும் இதன் சுவை மிகவும் பிடிக்கும் முயன்று பாருங்களேன்.


குறிப்பு:-)) இதற்க்கு நான் மில்க் சேர்ந்த கொகோ சாக்லேட்டை சேர்த்தேன்.டார்க் சாக்லேட் விரும்புவர்கள் டார்க் சாக்லேட் சேர்க்கலாம்.



Friday, July 19, 2013

நோன்பு கஞ்சி

இந்த ரமலான் மாதத்தில் நோன்பு காலங்களில் அனைத்து இந்திய முஸ்லீம்களில் பெரும்பாலானோர் நோன்பு திறந்தவுடன் சாப்பிடுவது நோன்பு கஞ்சிதான்.எவ்வளவு வகை வகையாக சாப்பிடுவதற்கு இருந்தாலும் நம் கலைப்பை போக்குவதற்க்கு மனம் நாடுவது இந்த கஞ்சியைதான்.
இதை ஒவ்வொரு ஊர்களிலும் பள்ளிவாசல் வாயில்களில் காய்ச்சி பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கி வருவது என்பது ஒரு தனி சிறப்பே...ஏழை,பணக்காரர் வித்தியாசமின்றி பள்ளிவாசல்களில் அமர்ந்தும் சரி,எல்லோர் வீடுகளிலும் சரி ஒருங்கிணைந்து சாப்பிடுவதும் இந்த கஞ்சியைதான்.
அப்படியான இந்த கஞ்சியை வெளிநாட்டில் வாழும் நாங்களும் எங்கள் வீட்டில் விரும்பி செய்து சாப்பிடுவோம்.நிறைய சகோதரிகள் இந்த குறிப்பினை பகிர்ந்திருந்தாலும் எனது இல்லத்தில் இடம்பெற வேண்டும் அல்லவா?அதிலும் ஒவ்வொரு மாவட்டுங்களுக்கு ஏற்ப அதன் குறிப்பு சற்றே வித்தியாசப்படும்.எனவே எங்கள் ஊர் சிறப்பு கஞ்சி என்ற முறையில் இந்த குறிப்பினை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.



                                                        நோன்பு கஞ்சி

தேவையான பொருட்கள்

உடைத்த பச்சரிசி                  -  கால் கப்
கடலை பருப்பு                        -  ஒரு ஸ்பூன்
வெந்தயம்                                  -  ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம்                -  ஒன்று
பூண்டு                                          -   4 பல்
தக்காளி,கேரட்                         -   (தலா)அரிந்தது ஒரு தேக்கரண்டி அளவு
பச்சை மிளகாய்                       -   2(அ)3
புதினா தழை                             -  சிறிதளவு
பட்டை                                         - சிறு துண்டு
கிராம்பு,ஏலக்காய்                   - தலா ஒன்று
எண்ணெய்                                  - 2 தேக்கரண்டி
நெய்                                               -  1 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு அரவை            -   1 ஸ்பூன்
திக்கான தேங்காய் பால்       -   கால் கப்

செய்முறை


அரிசியோடு கடலைபருப்பையும்,வெந்தயத்தையும் சேர்த்து நன்கு கழுவிவிட்டு கால் மணிநேரம் ஊற விடவும்.
வெங்காயத்தையும்,பூண்டையும் நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயை கீறி வைத்து விடவும்.


ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு பின் தக்காளி,புதினா தவிர்த்து மற்றவற்றை போட்டு வதக்கவும்.லேசாக வதங்கும் போதே இஞ்சி,பூண்டு அரவை சேர்த்து வாசம் வர வதக்கவும்.பின்பு தக்காளி,புதினாவை சேர்த்து சிறிது வதக்கி விட்டு 4 டம்ளர் தண்ணீர் விடவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்திருக்கும் அரிசி,பருப்பை போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து குக்கரை மூடி வெயிட் போடவும்.ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.(விசில் விடுபவர்கள் சாதத்திற்க்கு வைப்பது போல் விசில் விட்டு இறக்கலாம்)


ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து நன்கு பூணடை மசித்தபடி கிளறிவிட்டு பாலை ஊற்றி அடுப்பில் கொதிக்கவிடவும்.ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கி வைக்கவும்.(மிகவும் கெட்டியாக இருந்தால் பாலோடு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.)
சுவையான கலைப்பை போக்க கூடிய நோன்பு கஞ்சி தயார்.இதை பேச்சுலர்ஸ் கூட செய்ய கூடிய அளவிற்க்கு சுலபமான குறிப்பாகும்.(இது நான்கு கப் அதாவது நான்கு பேர் குடிப்பதற்கான குறிப்பாகும்)



குறிப்பு:-)) இதில் கைமா விரும்புவர்கள் ஆரம்பத்தில் சேர்த்து வதக்கி விட்டு பின் மற்றவற்றை சேர்த்து வதக்கலாம்.கடைசியில் முருங்கை கீரை இலை ஒரு கைப்பிடி பால் ஊற்றும் போது அதையும் சேர்க்கலாம்.பார்க்கவும் சரி குடிக்கவும் நன்றாக இருக்கும்.அதே போல் சுண்டல் அதில் தனியேவும் சேர்க்கலாம்.இல்லை தனியே தாளித்து கஞ்சியோடு சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.




Saturday, July 13, 2013

ஜெல்லி லெயர் கேக்

இறைவனின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

இந்த வலைப்பூவை அலங்கரித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் ரமலான் மாதம் சிறப்பிற்கான வாழ்த்தினை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.


இம்மாதம் நம் எல்லோர்க்கும் சிறப்பானதாக அமையவேண்டுமெனவும் இறைவனிடம் இறைஞ்சுகின்றேன்.

இந்த மாதத்தில் எனது இல்லத்தில் இஃப்தாரில் செய்யும் ஒரு சில குறிப்புகளை இங்கே அவ்வபோது பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறேன்.ஏதேனும் புதுவிதமான குறிப்புகளை செய்து பார்ப்பதும் உண்டு.அப்படி இந்த வருடம் இந்த ஜெல்லி லேயர் கேக்கினை செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகளுக்கு பிடித்திருந்தது.அதை எனது இல்லத்தில் முதலாவதாக பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்.வாங்க செய்முறையை பார்ப்போம்....

                                                       ஜெல்லி லேயர் கேக்



தேவையான பொருட்கள்

அகர் அகர் (அ) ஜெல்லி மிக்ஸ்  -  ஒரு ஸ்பூன்(ரெட் கலர்)
கண்டன்ஸ்ட் மில்க்                        -  கால் கப்
ஜெலட்டின்                                         -   1 1/4 ஸ்பூன்
அன் சால்ட்டட் பட்டர்                    -   20 கிராம்
மேரி பிஸ்கட்                                     -   5
தேவைப்பட்டால் சீனி                    -   3 ஸ்பூன்

செய்முறை

மேரி பிஸ்கட்டை ஒரு பாலிதீன் கவரின் உள்ளே வைத்து ஒரு சப்பாத்தி கட்டையால் நொருக்கி கொள்ளவும்.
ஒரு சதுர அல்லது செவ்வக நான்ஸ்டிக்கோ,கண்ணாடி ட்ரேயையோ எடுத்துக் கொள்ளவும்.அதன் உள்ளே நெய்யோ பட்டரோ தடவி வைத்துக் கொள்ளவும்.

நுணுக்கிய பிஸ்கட்டை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு அதில் பட்டரை உருக்கி ஊற்றி நன்கு ஒன்று சேர கலந்து வைத்துக் கொள்ளவும்.
அதை அந்த பட்டர் தடவிய ட்ரேயில் பரவலாகவும் சரிசமமாகவும் அழுத்தி வைத்து விட்டு,அதை ப்ரீசரில் 5 நிமிடம் வைக்கவும்.

அதற்க்குள்ளாக ஜெலட்டினை எடுத்துக்கொண்டு அதில் வெதுவெதுப்பான தண்ணீர் 4 ஸ்பூன் ஊற்றி நன்கு கரையவிடவும்.நன்கு கரைந்தவுடன்,அதை மில்க்மெய்டோடு நன்கு கலந்துவிடவும்.அதை செட்டான பிஸ்கட் ட்ரேயை எடுத்து அதின் மேல் மெதுவாக ஊற்றவும்.அது பரவலாக ஆனதும் அதையும் ப்ரீசரில் வைத்து 10 நிமிடம் செட் செய்யவும்.
அதற்க்குள்ளாக ஜெல்லி மிக்ஸை கொதிக்கும் நீரில் கலந்து நன்கு கரைய விடவும்.அதில் உள்ள இனிப்பு போதவில்லையெனில் கொஞ்சம் கலந்து கொள்ளவும்.நன்கு கரைந்ததும் செட் ஆன ட்ரேயை எடுத்து அதன் மேல் மெதுவாக ஊற்றவும்.அதை நார்மலாக ப்ரிட்ஜில் வைத்து விடவும்.குறைந்தது ஒரு மணிநேரம் செட் ஆகவிடவும்.


பிறகு எடுத்து கத்தியால் துண்டு போட்டு அடிவரை நன்கு கீரி மெதுவாக எடுத்து வைக்கவும்.சில்லென்று சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.இனிப்பு விரும்பும் குழந்தைகள் இதை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.


Monday, March 11, 2013

எனது மாமியாரின் கைவண்ணம்

இங்கு எங்கள் வீட்டில் அலங்கரிக்கும் விஷயங்களில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர் எனது மாமியார் அவர்கள்தான்.அதிலும் கைவேலைபாடுகளில் அவரின் ஆர்வத்தை ஏற்கனவே நான் முன்பு உள்ள எங்கள் வீட்டு கைவண்ணம் பகுதியில் சொல்லியிருக்கின்றேன்.இப்பொழுது சிங்கப்பூரில் வீட்டில் பொழுதை போக்குவதற்க்கு இது அவருக்கு கைகொடுக்கின்றது.
நாம் பொருட்கள் வாங்கி வரும் கலர் கலர் பாலீதின் பைகளைக் கொண்டு பல வண்ணப்பூக்களையும்,உடைந்து போன மக்குகளை கொண்டு பூச்சாடிகளையும் செய்து அலங்கரித்து வீட்டில் வைத்து அழகுப்படுத்தியுள்ளார்.இதோ அவற்றில் சில....


ஒரு சில பூக்களை கொண்டு பூங்கொத்துகளாக சுவரை அலங்கரித்தவண்ணம் ஆங்காங்கே வைத்துள்ளார்.அவற்றில் சில இதோ பார்வைக்கு.....



இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இதில் எந்த ஒரு பொருளுமே இதற்க்காக என  வாங்கியது இல்லை.இலைகளுக்கு பாத்திரம் துலக்க நாம் பயன்படுத்தும் ஸ்க்ரப்பரையும்,பூக்களுக்கு வண்ண பாலீதின் பைகளும்,சில வண்ண அட்டைகளும் தான்.இவை எல்லாமே நாம் வேண்டாம் என தூர போடும் பொருட்களை சேர்ந்தவையே.... அவற்றை கொண்டு எங்கள் வீடு அலங்கரித்தவண்ணம் இருக்கின்றார் எனது மாமியார்.
இந்த வயதிலும் அதிக ஆர்வத்தோடு செயல்படுவது என்பது பெருமையோடு பாராட்டுக்குரியதாகும்.






Saturday, February 23, 2013

ஸ்பெஷல் ரைஸ் நூடுல்ஸ்





தேவையான பொருட்கள்

ரைஸ் நூடுல்ஸ் பாக்கெட்    --------   ஒன்று
பெரிய வெங்காயம்                   --------   ஒன்று
கேரட்                                               --------   பாதி
முட்டைகோஸ்,கலர் குடமிளகாய்கள் ----- சிறிதளவு
ஸ்ப்ரவ்ட்                                        ---------  இரண்டு கப் அளவு
டோபு    
சொயாங் கீரை                              -------- ஒரு பாக்கெட்
பச்சைமிளகாய்                             --------  இரண்டு
பூண்டு                                                -------- மூன்று பல்
முட்டை                                           -------- 2
சில்லி பேஸ்ட்                              --------  3 ஸ்பூன்
சோயா சாஸ்                                 --------  ஒரு ஸ்பூன்
நார்(knorr)ஸ்டாக் க்யூப்ஸ்         --------  2
எண்ணெய்                                       -------- அரை கப்

செய்முறை

ஒரு அகலபாத்திரத்தில் இரண்டு லிட்டர் அளவு தண்ணீர் விட்டு ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதி வந்ததும்,இந்த நூடுல்ஸை அப்படியே போட்டு மூடி வைக்கவும்.


அதன்பின் காய்களை நீளவாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளவும்.ஸ்ப்ரவ்ட்டை நன்கு அலசி வைத்து கொள்ளவும்.
கீரையையும் படத்தில் உள்ளவாறு நறுக்கி கொள்ளவும்.டோஃபுவை படத்தில் உள்ளபடி சின்ன சின்னதாக துண்டுகளாக்கவும்.பூண்டையும்,பச்சைமிளகாயையும் நசுக்கி கொள்ளவும்.
இப்போது நூடுல்ஸை தண்ணீர் வடிக்கட்டி வைத்து விடவும்.


ஒரு அகலபாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,ஸ்டாக் க்யூபை போட்டு வதக்கவும் அது கரைந்ததும்,நசுக்கி வைத்திருக்கும் பச்சைமிளகாய்,பூண்டை சேர்த்து சிறிது வதக்கவும்.
பின்பு நறுக்கிய காய்களையும்,ஸ்ப்ரவுட்டையும் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

அதன் பின் சோயா சாஸ்,சில்லி பேஸ்ட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.அதன் பின் முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிட்டு பின்பு நூடுல்ஸை சேர்த்து நன்கு எல்லாம் ஒன்று சேர கிளறி விடவும்.எல்லாம் நன்கு கலந்து விட்டதும் குறைந்த தீயில் வைத்து விடவும்.நன்கு எல்லா பக்கமும் சூடேறியதும் உப்பு சரிபார்த்துவிட்டு இறக்கவும்.(ஸ்டாக்கில் உப்பு இருப்பதால் கடைசியில் பார்த்து விட்டு தேவைபடுமானால் போடவும்)










இதற்கிடையில் எண்ணெயில் டோஃபு துண்டுகளை பொன்னிறமாக (மிகவும் சிவந்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்)பொறித்து எடுத்துக் கொள்ளவும்.பறிமாறுவதற்கு முன் சேர்த்து கிளறி பறிமாறினால் சாப்பிடுவதற்க்கு மிகவும் நன்றாக இருக்கும்.
இதில் அதிக காய்கறிகள் சேர்த்து இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.எப்போதும் ஒரே மாதிரி சாப்பிடுவதற்க்கு இது போன்று சாப்பிடுவது நன்றாக சுவையாக இருக்கும்.

முன்பெல்லாம் நான் இந்த ரைஸ் நூடுல்ஸை அரிந்து வைத்திருக்கின்ற காயோடு இறாலும் சேர்த்து மட்டுமே செய்ததுண்டு.இங்கே சிங்கப்பூர் பழக்கபடி என் நாத்தினார் கீரை,ஸ்ப்ரவ்ட்,டோஃபு என புதிதாக சேர்த்து செய்து சாப்பிட பழக்கியது எனக்கு வித்தியாசமாகவும்,நால்ல மனமோடு சுவையாகவும் இருக்க,இப்போது விரும்பிய உணவுகளில் ஒன்றாக எனக்கு இது ஆகிவிட்டது.



Friday, January 18, 2013

சிம்பிள் எண்ணெய் கத்திரிக்காய்



இந்த எண்ணெய் கத்திரிக்காய் எனது அம்மாவின் கைபக்குவத்தில் நான் ருசித்து சாப்பிடுபவற்றில் ஒன்று.அதை நான் செய்து உங்களோடு எனது பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்

தேவையான பொருட்கள்:-

சின்ன கத்திரிக்காய்      -   5
சின்ன வெங்காயம்        -   1/2 கப்
தக்காளி                              -   2
பச்சைமிளகாய்                -   1
பூண்டு                                  -   3 பல்
புளி                                        - சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள்                  - 2 ஸ்பூன்
மஞ்சள்த்தூள்                    -  1/4 ஸ்பூன்
மல்லித்தூள்                       -  1 1/2 ஸ்பூன்
நல்லெண்ணை                 -   1 1/2 குழிகரண்டி
கடுகு,வெந்தயம்,மிளகு,சீரகம் -எல்லாம் சேர்ந்து ஒரு ஸ்பூன்
தேங்காய் பல் பல்லாக நறுக்கியது சிறிதளவு
கறிவேப்பிலை                _  ஒரு கொத்து

செய்முறை:-

கத்திரிக்காயை சிறியதாக இருப்பதால் காம்பை நீக்கிவிட்டு பாதியளவில் நான்காய் கீறி கழுவி வைத்துக்கொள்ளவும்.
சின்னவெங்காயத்தை நீளவாக்கில் இரண்டு மூன்றாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதே போல் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு சிறிய குக்கர் அல்லது வானலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,கடுகு,வெந்தயம்,மிளகு,சீரகம் இவற்றை போட்டு பொறிந்ததும் கறிவேப்பிலையை போட்டு பின்பு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம்,பூண்டு,தக்காளியையும்,பச்சைமிளகாயை கீறியும் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியதும் மஞ்சள்,மிளகாய்த்தூள்களை போட்டு வதக்கி கொண்டே நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயையும்,தேங்காய் பல்லையும் சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்கு வதங்க விடவும்.

கத்திரிக்காய் வதங்கி எண்ணெய் மினுமினுப்போடு இருக்கும்போது மல்லித்தூளை சேர்த்து பிரட்டி விட்டு புளியை கரைத்து ஊற்றி விடவும்.
வானலியில் வைத்தால் வேகும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றவும்.குக்கரில் வைத்தால் சிறிதளவே ஊற்றினால் போதும்.உப்பு சரி பார்த்து விட்டு குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கி விடலாம்.எண்ணெய் மினுமினுப்போடு  இருக்க வேண்டும்.தண்ணியாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.அப்படியே தண்ணீர் நின்றாலும் சுண்டும் வரை மிதமான தீயில் அடுப்பில் வைத்து இறக்கவும்.
சுவையானதொரு எண்ணெய் கத்திரிக்காய் ரெடி.



இது பருப்பு சாதம்.கிச்சடி சாதம்,எல்லா வகையான பிரியாணி இவற்றிற்க்கு நல்லதொரு காம்பினேஷனாக இருக்கும்.

குறிப்பு:- இதற்க்கு நல்ல பிஞ்சு கத்திரிக்காயாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.அதே போல் எவ்வளவு நன்றாக வதக்குகிறோமோ அவ்வளவு நல்ல சுவையை தரும்.






















Thursday, January 10, 2013

சிங்கப்பூரில் என்னை கவர்ந்த விஷயம்…..



நான் இங்கே சிங்கப்பூர் வந்து தெரிந்து கொண்ட ஒரு நல்ல விஷயம்,இங்கு இருக்கும் சில பள்ளிவாசல்களில் நிறைய இஸ்லாமிய வகுப்புகள் நடைப்பெற்றுவருவதுதான்.நான் இதற்க்கு முன் துபாயில் இருந்து வந்ததால் அங்கே நாம் தனியாக இஸ்லாமிய வகுப்பு என்று போய் கொண்டிருக்க தேவையில்லை.ஏனென்றால் அங்கே எல்லா பள்ளிக்கூடங்களிலுமே கட்டாயம் இஸ்லாமிய வகுப்புகள் இருக்கும்.அதிலேயே ஹதீஸ்கள்,நம் இஸ்லாமிய பழக்கவழக்கங்கள் என அனைத்து விஷயங்களையும் சொல்லிதந்துவிடுவார்கள்.வீட்டிலும் பிள்ளைகள் வந்து நம்மோடு கலந்துரையாடி சின்ன சின்ன சந்தேகங்களையெல்லாம் நிவர்த்தி செய்து கொண்டு நல்லபடியாக தொழுகையோடு நடைமுறைபடுத்தி வருவார்கள்.என் மூத்த பையனும் அப்படித்தான் மிகுந்த ஆர்வத்தோடு ஓதியப்படியும்,சூரா மனப்பாடம் செய்துக் கொண்டும்,தொழுது கொண்டும் இருந்து வந்தான்.அப்புறம் ஒன்றரை வருடங்கள் நம் ஊரில் நாட்கள் சென்றுவிட்டன.அங்கு அப்படியே நிறைய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்து விட்டது.இஸ்லாமிய பாடத்தின் ஆர்வம் கொஞ்சம் குறைந்தும் போனது என்றே சொல்லலாம்.

இப்போது சிங்கப்பூரில் நாம் எப்படி பிள்ளைகளுக்கு பழையப்படி கொண்டுவருவது என்ற யோசனையிலேயே (ஏன் கவலை என்று கூட சொல்லலாம்)இந்த நாட்டிற்கு வந்தோம்.ஏனென்ன்றால் கலாச்சார சீரழிவு என்பது எந்த மாதிரி சூழ்நிலைகளிலும் ஏற்படுகின்றது.அவற்றிலிருந்து நம் பிள்ளைகளை மீட்டு கொண்டு வருவது என்பது மிக பெரிய விஷயம்.அதற்க்காக தான் அவர்களின் பிஞ்சு பருவத்திலேயே மார்க்கத்தினை பற்றி சொல்லி அவர்கள் மனதில் நல்லவை எது? கெட்டவை எது?என மார்க்க அடிப்படையில் பிரித்து பார்த்து செயல்பட பழக்கிவிட்டோமேயானால் அல்ஹம்துலில்லாஹ் அவர்களை தீயவைகளை விட்டு பாதுகாத்து விடலாம்.அதே சமயத்தில் நாம் என்னதான் வீட்டிலேயே சொல்லி கொடுத்தாலுமே…அதை ஆழமாக செயல்படுத்துவதற்க்கு உஸ்தாத் என்பவரின் பார்வையில் நடைப்பெறும் இஸ்லாமிய வகுப்பு மிகவும் சிறந்ததாக இருக்கும் என எனக்கும்,என்னவருக்கும் தோன்றியது….
அப்படிப்பட்ட ஒரு நல்ல விஷயத்தைதான் இந்த சிங்கப்பூரில் மிகவும் சிறந்த முறையில் வாராந்திர வகுப்பு நடத்திக் கொண்டு வருவதை பார்த்தோம்.மனதிற்க்கு ஒரு சந்தோஷம்,ஆறுதல்.அப்படி என்னவெல்லாம் ஒரு நாளில் செய்திட முடியும் என்று எண்ணுகிறீர்களா..?அதையும் சொல்கிறேன் கேளுங்கள்.


வாரத்திற்க்கு ஒரு முறை சிறு குழைந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வரை இரண்டு மணிநேரம் வகுப்பு நடைப்பெறுகின்றது.அதில் அரபு எழுத்துக்களை சொல்லி கொடுப்பது முதல் உச்சரிப்பு பிழையினை திருத்தம் செய்வது வரை அனைத்தையும் சொல்லித்தருகின்றார்கள்.அதுமட்டும் அல்லாது,அன்றாடம் பயன்படுத்த வேண்டிய சூரா முதல் குர்ஆன் ஆயத்துகளையும் மனபாடம் செய்ய ஆர்வமூட்டுகிறார்கள்.மற்றுமொரு சிறப்பு என்னவெனில்,ஒரு மாத விடுமுறை காலங்களில் மூன்று நாட்கள் கேம்ப் நடத்தி வருகிறார்கள்.இதில் பண்ணிரண்டு வயதும்,அதற்க்கு மேற்பட்ட அனைத்து பிள்ளைகளும் கலந்து கொள்ளலாம்.(இன்ஷா அல்லாஹ் என் மகனை அடுத்த விடுமுறையில் நடக்கவிருப்பதில் கலந்துக் கொள்ள செய்யணும்)ஆண்குழந்தைகள் இரவு,பகலாக தங்குவது எனவும் பெண்பிள்ளைகள் அந்த கேம்ப் நடக்கும் மூன்று நாளும் காலை எட்டு மணியளவில் வந்துவிட்டு மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புகின்ற முறையிலும் சிறப்பாக நடத்திவருகின்றார்கள்.இதற்க்காக அக்குழந்தைகளுக்கு சாப்பாடு தருவதற்க்காக ஒரு சிறு தொகையை கணக்கிட்டு பெற்றுகொள்கிறார்கள். இவையெல்லாம் மஸ்ஜிதில் தான் நடைப்பெறுகின்றது.அந்த கேம்ப்பில் தஹஜ்ஜத் தொழுகையை அவசியம் தொழச்செய்து,அதன் முக்கியத்துவத்தை கற்றுத்தருகிறார்கள். எல்லோரும் கூட்டாக சேர்ந்து தொழுது ஓதிக்கொண்டு இருப்பதோடு அல்லாமல், பயான்கள் சொல்வது அதை அவர்களும் எப்படியெல்லாம் பேசி பழகுவது, இஸ்லாமிய விஷயங்கள் சம்பந்தபட்ட வகையில் சில ஆக்டிவிட்டீஸ் என செய்து குழந்தைகளை மிகவும் உற்ச்சாகப்படுத்தி ஆர்வமூட்டி வருகிறார்கள்.இது மட்டும் அல்லாது… தற்போதைய ஒரு மாத காலமாக குர்ஆன் ஓதும் ஆண்பிள்ளைகளுக்கு மட்டும் ஸ்பெஷல் க்ளாஸாக புதன்கிழமை தோறும் மாலை ஒரு மணிநேரம் நடத்திவருகின்றார்கள்.அதன்பிறகு மக்ரிப் தொழுகைக்குபின்,சிறந்த தலைப்புகளில் பிள்ளைகளுக்கும்,பெரியவர்களுக்கும் புரியும்வண்ணம் பயான்கள் சொல்கின்றார் உஸ்தாத் ரஹ்மத்துல்லா என்பவர்.இவர்தான் இந்த இஸ்லாமிய வகுப்பு நடத்துவதற்க்கு தலைமை வகிப்பவர்.சிறந்த முறையில் செயல்படுத்தி கொண்டும் இருப்பது நன்கு தெரிய வருகின்றது.இது போன்று ஏழு இடங்களில் உள்ள பள்ளிகளிலுமே நடத்தி வருவதாக சொல்கிறார்கள்.இந்த நல்ல சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொண்டு நம் பிள்ளைகளுக்கு நல்ல விஷயத்தை கொடுத்தோம் என்ற திருப்தியோடு நமக்கும்,பள்ளிவாசல்களுக்கும் இடையே தூரம் அதிகமானாலும் இது போன்று அடிக்கடி சென்று நம் நேரத்தை நல்ல முறையில் செலவிடுவது என்பது நமக்கு மிகுந்த சந்தோஷத்தையும்,மனநிம்மதியையும் கொடுக்கின்றது.


நாம் இது போன்ற வெளிநாடுகளில் இருந்து கொண்டு எவ்வளவோ வெளியில் சுற்றுவது,அலங்கார பொருட்களை வாங்குவது,வெளியில் சாப்பிடுவது என நிறைய நேரங்களையும்,பணத்தையும் செலவழிக்கும் போது வாரத்திற்க்கு ஒரு முறையோ,இருமுறையோ நாம் இப்படி பள்ளிகளுக்கு சென்று நல்ல முறையில் நேரத்தை கழிப்பது என்பது மிகவும் நல்ல விஷயம்தானே…?இது போன்று நடைப்பெறும் வகுப்புகளுக்கு நாமும் நல்லமுறையில் ஒத்துழைப்பு தந்தோமேயானால் அவர்கள் தொடர்ந்து இன்னும் சிறப்பாக செயல்பட வசதியாக இருக்கும்.இந்த சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு சிலபேருக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போகலாம்.அதற்காகவே நான் இதை என் இல்லத்தில் பதிவு செய்கிறேன்.



எல்லாவல்ல இறைவன் எங்களுக்கு இதை நிலைக்க செய்திட தினம் தினம் இறைஞ்சுகிறேன்.







Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out