Friday, July 19, 2013

நோன்பு கஞ்சி

இந்த ரமலான் மாதத்தில் நோன்பு காலங்களில் அனைத்து இந்திய முஸ்லீம்களில் பெரும்பாலானோர் நோன்பு திறந்தவுடன் சாப்பிடுவது நோன்பு கஞ்சிதான்.எவ்வளவு வகை வகையாக சாப்பிடுவதற்கு இருந்தாலும் நம் கலைப்பை போக்குவதற்க்கு மனம் நாடுவது இந்த கஞ்சியைதான்.
இதை ஒவ்வொரு ஊர்களிலும் பள்ளிவாசல் வாயில்களில் காய்ச்சி பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கி வருவது என்பது ஒரு தனி சிறப்பே...ஏழை,பணக்காரர் வித்தியாசமின்றி பள்ளிவாசல்களில் அமர்ந்தும் சரி,எல்லோர் வீடுகளிலும் சரி ஒருங்கிணைந்து சாப்பிடுவதும் இந்த கஞ்சியைதான்.
அப்படியான இந்த கஞ்சியை வெளிநாட்டில் வாழும் நாங்களும் எங்கள் வீட்டில் விரும்பி செய்து சாப்பிடுவோம்.நிறைய சகோதரிகள் இந்த குறிப்பினை பகிர்ந்திருந்தாலும் எனது இல்லத்தில் இடம்பெற வேண்டும் அல்லவா?அதிலும் ஒவ்வொரு மாவட்டுங்களுக்கு ஏற்ப அதன் குறிப்பு சற்றே வித்தியாசப்படும்.எனவே எங்கள் ஊர் சிறப்பு கஞ்சி என்ற முறையில் இந்த குறிப்பினை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.



                                                        நோன்பு கஞ்சி

தேவையான பொருட்கள்

உடைத்த பச்சரிசி                  -  கால் கப்
கடலை பருப்பு                        -  ஒரு ஸ்பூன்
வெந்தயம்                                  -  ஒரு ஸ்பூன்
பெரிய வெங்காயம்                -  ஒன்று
பூண்டு                                          -   4 பல்
தக்காளி,கேரட்                         -   (தலா)அரிந்தது ஒரு தேக்கரண்டி அளவு
பச்சை மிளகாய்                       -   2(அ)3
புதினா தழை                             -  சிறிதளவு
பட்டை                                         - சிறு துண்டு
கிராம்பு,ஏலக்காய்                   - தலா ஒன்று
எண்ணெய்                                  - 2 தேக்கரண்டி
நெய்                                               -  1 ஸ்பூன்
இஞ்சி,பூண்டு அரவை            -   1 ஸ்பூன்
திக்கான தேங்காய் பால்       -   கால் கப்

செய்முறை


அரிசியோடு கடலைபருப்பையும்,வெந்தயத்தையும் சேர்த்து நன்கு கழுவிவிட்டு கால் மணிநேரம் ஊற விடவும்.
வெங்காயத்தையும்,பூண்டையும் நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயை கீறி வைத்து விடவும்.


ஒரு குக்கரை அடுப்பில் வைத்து நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் பட்டை,கிராம்பு,ஏலக்காய் போட்டு பின் தக்காளி,புதினா தவிர்த்து மற்றவற்றை போட்டு வதக்கவும்.லேசாக வதங்கும் போதே இஞ்சி,பூண்டு அரவை சேர்த்து வாசம் வர வதக்கவும்.பின்பு தக்காளி,புதினாவை சேர்த்து சிறிது வதக்கி விட்டு 4 டம்ளர் தண்ணீர் விடவும்.

தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்திருக்கும் அரிசி,பருப்பை போட்டு தேவையான அளவு உப்பும் சேர்த்து குக்கரை மூடி வெயிட் போடவும்.ஒரு விசில் வந்ததும் அடுப்பை சிம்மில் வைத்து பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.(விசில் விடுபவர்கள் சாதத்திற்க்கு வைப்பது போல் விசில் விட்டு இறக்கலாம்)


ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து நன்கு பூணடை மசித்தபடி கிளறிவிட்டு பாலை ஊற்றி அடுப்பில் கொதிக்கவிடவும்.ஒரு நிமிடம் கொதித்ததும் இறக்கி வைக்கவும்.(மிகவும் கெட்டியாக இருந்தால் பாலோடு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.)
சுவையான கலைப்பை போக்க கூடிய நோன்பு கஞ்சி தயார்.இதை பேச்சுலர்ஸ் கூட செய்ய கூடிய அளவிற்க்கு சுலபமான குறிப்பாகும்.(இது நான்கு கப் அதாவது நான்கு பேர் குடிப்பதற்கான குறிப்பாகும்)



குறிப்பு:-)) இதில் கைமா விரும்புவர்கள் ஆரம்பத்தில் சேர்த்து வதக்கி விட்டு பின் மற்றவற்றை சேர்த்து வதக்கலாம்.கடைசியில் முருங்கை கீரை இலை ஒரு கைப்பிடி பால் ஊற்றும் போது அதையும் சேர்க்கலாம்.பார்க்கவும் சரி குடிக்கவும் நன்றாக இருக்கும்.அதே போல் சுண்டல் அதில் தனியேவும் சேர்க்கலாம்.இல்லை தனியே தாளித்து கஞ்சியோடு சேர்த்து சாப்பிட சூப்பராக இருக்கும்.




Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out