ஆப்பம் தானே அதில் என்ன ஸ்பெஷல் என்று பலர் நினைக்கலாம்.இந்த ஆப்பமும் நிறைய பேருக்கு சரியாக வரவில்லை என்று சொல்லி கேட்டதுண்டு.என்னிடம் நிறைய பேர் கேட்டு தெரிந்து கொண்டதும் உண்டு.அதே போல் தெரியாதவர்களுக்கு இது உபயோகமாக இருக்கும் என்றே இந்த பகிர்வு...இதற்க்கு முதலில் அரிசி என்பது மிகவும் முக்கியம்.நம் தமிழ் நாட்டில் இருப்பவர்கள் அரிசி கடைகளில் ஆப்பம் அரிசி என்று கேட்டாலே சொல்லி விடுவார்கள்.கொஞ்சம் குண்டாக இருக்கும்.அதை வாங்கி வைத்து கொண்டு செய்தால் ஆப்பம் சும்மா பஞ்சு போன்று சாஃப்ட்டாக இருக்கும்.வெளிநாட்டில் இருப்பவர்கள் சூப்பர் மார்க்கெட்களில் white rice என்ற பெயரிட்ட அரிசியை பார்த்து வாங்கி உபயோகித்தால் ஆப்பம் நன்றாக வரும்.இல்லையேல் பாஸ்மதி அரிசியில் கொஞ்சம் தடிமனான அரிசியை பயன்படித்தினால் ஓரளவு நன்றாக வரும்.சரி இந்த விளக்கம் போதும் என்றே நினைக்கிறேன்.இப்ப செய்முறை விளக்கத்தை பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி _ மூன்று டம்ளர்
சாதம் _ அரை டம்ளர் அரிசியில் சமைத்த சாதம் அளவு
உளுந்து _ 3 தேக்கரண்டி
வெந்தயம் _ 1 தேக்கரண்டி
சமையல் சோடா _ 3 சிட்டிகை
*** செய்முறை ***
அரிசியுடன்,உளுந்தையும்,வெந்தயத்தையும் சேர்த்து 2 அல்லது 3 மணிநேரம் ஊறவைக்கவும்.பின்னர் நன்கு கழுவி விட்டு சாதத்தை அதில் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.(முதல் நாள் இரவு தண்ணீர் ஊற்றிய சாதம் கூட இதற்க்கு பயன்படுத்தலாம்.அப்போதைக்கு உள்ள சாதமும் பயன்படுத்தலாம்.)
பிறகு அதனை இரண்டு பிரிவாக போட்டு முதலில் தண்ணீர் இல்லாமல் அரைத்து விட்டு பின்பு ஐஸ் தண்ணீர் திட்டமாக ஊற்றி அரைத்து எடுக்கவும்.
(மாவு தோசை மாவு பதத்திற்க்கு இருக்க வேண்டும்)
அரைத்தமாவினில் தேவையான அளவு உப்பு போட்டு நன்கு பிசைந்து புளிக்க விடவும்.(சிலர் கை பதத்திற்க்கு ஆப்பம் அவ்வளவாக புளிக்காது.ஏன் இட்லி மாவே சீக்கிரத்தில் புளிக்காது.இட்லிக்கு அது பரவாயில்லை.ஆனால் ஆப்பத்திற்க்கு புளித்தால் தான் சாஃப்ட்டாகவும்,சாப்பிட நன்றாகவும் இருக்கும். அதே போல் குளிர் காலத்திலும் புளிக்க வைப்பது கஷ்ட்டம்.அதற்க்கு இந்த ஆப்ப மாவோடு இரண்டு கரண்டி புளித்த இட்லி மாவை ஊற்றி பிசைந்து வைத்தோமேயானால் நன்றாக புளித்து விடும்.)
புளித்த மாவில் சமையல் சோடாவை கரைத்து கலக்கி விட்டு பின்பு ஒரு ஆப்பகடாய் அல்லது தவாவை அடுப்பில் வைத்து நன்கு சூடு வந்ததும் ஒரு கரண்டி மாவை ஊற்றி சுற்றியோ அல்லது தடவியோ வார்க்கவும்.ம்பின்பு மூடி போட்டு அடி சிவந்து மேலே வேகும் வரை வைத்து எடுக்கவும்.இதே போல் குழந்தைகளுக்கு பல டிசைன்களிலும் ஊற்றி வார்க்கலாம்.மிகவும் சாஃப்ட்டான ஆப்பம் ரெடி.
இப்ப இதிலேயே மஞ்சள் ஆப்பம் செய்வது எப்படின்னு பார்ப்போம்.
*** அரைத்துக்கொள்ள ***
தேங்காய் துருவல் _ அரை கப்
சின்ன வெங்காயம் _ அரை கப்
பச்சைமிளகாய் _ ஒன்று
மஞ்சள்த்தூள் _ 1 தேக்கரண்டி
சோம்பு _ 1 தேக்கரண்டி
*** செய்முறை ***
தேங்காயையும்,சோம்பையும் ஒரு சுற்று சுற்றி விட்டு பின் வெங்காயத்தையும்,பச்சைமிளகாயையும்,மஞ்சள்தூளையும் சேர்த்து தண்ணீர் சேர்க்காமலே கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.
பின்பு அதனை இதில் முக்கால் வாசி ஆப்பமாவோடு கலந்தாலே போதுமானது.அதனுடன் ஒரு முட்டையையும்,சீனி-1 தேக்கரண்டியும் சேர்த்து நன்கு ஒன்று சேர கலக்கி வைத்து கொள்ளவும்.
தவாவை அடுப்பில் வைத்து சூடு வந்ததும்,ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி நடுவில் கரண்டியால் லேசாக தளர்த்தி விட்டாலே போது.மெல்லியதாக வார்க்க வேண்டாம்.பிறகு சுற்றிலும் எண்ணெய் மற்றும் நெய் கலந்ததை ஒரு ஸ்பூன் ஊற்றி மிதமான தீயில் அடி நன்கு சிவக்க விடவும்.
அடி சிவந்ததும்,மெதுவாக திருப்பி போட்டு மறுபடியும் எண்ணெய்,நெய்யை ஒரு ஸ்பூன் சுற்றி ஊற்றி சிவந்ததும் எடுத்து சூடாக சாப்பிடவும்.
குழந்தைகளுக்கு குட்டி குட்டியாக சுட்டு கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.ஸ்கூலுக்கும் எடுத்து செல்வார்கள்.
வெள்ளை ஆப்பத்திற்க்கு தேங்காய் பால் மிகவும் சூப்பராக இருக்கும்.அதை தவிர்த்து இரண்டுக்குமே காரமான தக்காளி சட்னி,சன்னா மசாலா ,கோழி,கறி குழம்பு நன்றாக இருக்கும்.