Showing posts with label சில தகவல்கள்..... Show all posts
Showing posts with label சில தகவல்கள்..... Show all posts

Thursday, January 10, 2013

சிங்கப்பூரில் என்னை கவர்ந்த விஷயம்…..



நான் இங்கே சிங்கப்பூர் வந்து தெரிந்து கொண்ட ஒரு நல்ல விஷயம்,இங்கு இருக்கும் சில பள்ளிவாசல்களில் நிறைய இஸ்லாமிய வகுப்புகள் நடைப்பெற்றுவருவதுதான்.நான் இதற்க்கு முன் துபாயில் இருந்து வந்ததால் அங்கே நாம் தனியாக இஸ்லாமிய வகுப்பு என்று போய் கொண்டிருக்க தேவையில்லை.ஏனென்றால் அங்கே எல்லா பள்ளிக்கூடங்களிலுமே கட்டாயம் இஸ்லாமிய வகுப்புகள் இருக்கும்.அதிலேயே ஹதீஸ்கள்,நம் இஸ்லாமிய பழக்கவழக்கங்கள் என அனைத்து விஷயங்களையும் சொல்லிதந்துவிடுவார்கள்.வீட்டிலும் பிள்ளைகள் வந்து நம்மோடு கலந்துரையாடி சின்ன சின்ன சந்தேகங்களையெல்லாம் நிவர்த்தி செய்து கொண்டு நல்லபடியாக தொழுகையோடு நடைமுறைபடுத்தி வருவார்கள்.என் மூத்த பையனும் அப்படித்தான் மிகுந்த ஆர்வத்தோடு ஓதியப்படியும்,சூரா மனப்பாடம் செய்துக் கொண்டும்,தொழுது கொண்டும் இருந்து வந்தான்.அப்புறம் ஒன்றரை வருடங்கள் நம் ஊரில் நாட்கள் சென்றுவிட்டன.அங்கு அப்படியே நிறைய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்து விட்டது.இஸ்லாமிய பாடத்தின் ஆர்வம் கொஞ்சம் குறைந்தும் போனது என்றே சொல்லலாம்.

இப்போது சிங்கப்பூரில் நாம் எப்படி பிள்ளைகளுக்கு பழையப்படி கொண்டுவருவது என்ற யோசனையிலேயே (ஏன் கவலை என்று கூட சொல்லலாம்)இந்த நாட்டிற்கு வந்தோம்.ஏனென்ன்றால் கலாச்சார சீரழிவு என்பது எந்த மாதிரி சூழ்நிலைகளிலும் ஏற்படுகின்றது.அவற்றிலிருந்து நம் பிள்ளைகளை மீட்டு கொண்டு வருவது என்பது மிக பெரிய விஷயம்.அதற்க்காக தான் அவர்களின் பிஞ்சு பருவத்திலேயே மார்க்கத்தினை பற்றி சொல்லி அவர்கள் மனதில் நல்லவை எது? கெட்டவை எது?என மார்க்க அடிப்படையில் பிரித்து பார்த்து செயல்பட பழக்கிவிட்டோமேயானால் அல்ஹம்துலில்லாஹ் அவர்களை தீயவைகளை விட்டு பாதுகாத்து விடலாம்.அதே சமயத்தில் நாம் என்னதான் வீட்டிலேயே சொல்லி கொடுத்தாலுமே…அதை ஆழமாக செயல்படுத்துவதற்க்கு உஸ்தாத் என்பவரின் பார்வையில் நடைப்பெறும் இஸ்லாமிய வகுப்பு மிகவும் சிறந்ததாக இருக்கும் என எனக்கும்,என்னவருக்கும் தோன்றியது….
அப்படிப்பட்ட ஒரு நல்ல விஷயத்தைதான் இந்த சிங்கப்பூரில் மிகவும் சிறந்த முறையில் வாராந்திர வகுப்பு நடத்திக் கொண்டு வருவதை பார்த்தோம்.மனதிற்க்கு ஒரு சந்தோஷம்,ஆறுதல்.அப்படி என்னவெல்லாம் ஒரு நாளில் செய்திட முடியும் என்று எண்ணுகிறீர்களா..?அதையும் சொல்கிறேன் கேளுங்கள்.


வாரத்திற்க்கு ஒரு முறை சிறு குழைந்தைகள் முதல் பெரியவர்களுக்கு வரை இரண்டு மணிநேரம் வகுப்பு நடைப்பெறுகின்றது.அதில் அரபு எழுத்துக்களை சொல்லி கொடுப்பது முதல் உச்சரிப்பு பிழையினை திருத்தம் செய்வது வரை அனைத்தையும் சொல்லித்தருகின்றார்கள்.அதுமட்டும் அல்லாது,அன்றாடம் பயன்படுத்த வேண்டிய சூரா முதல் குர்ஆன் ஆயத்துகளையும் மனபாடம் செய்ய ஆர்வமூட்டுகிறார்கள்.மற்றுமொரு சிறப்பு என்னவெனில்,ஒரு மாத விடுமுறை காலங்களில் மூன்று நாட்கள் கேம்ப் நடத்தி வருகிறார்கள்.இதில் பண்ணிரண்டு வயதும்,அதற்க்கு மேற்பட்ட அனைத்து பிள்ளைகளும் கலந்து கொள்ளலாம்.(இன்ஷா அல்லாஹ் என் மகனை அடுத்த விடுமுறையில் நடக்கவிருப்பதில் கலந்துக் கொள்ள செய்யணும்)ஆண்குழந்தைகள் இரவு,பகலாக தங்குவது எனவும் பெண்பிள்ளைகள் அந்த கேம்ப் நடக்கும் மூன்று நாளும் காலை எட்டு மணியளவில் வந்துவிட்டு மாலை ஐந்து மணிக்கு வீடு திரும்புகின்ற முறையிலும் சிறப்பாக நடத்திவருகின்றார்கள்.இதற்க்காக அக்குழந்தைகளுக்கு சாப்பாடு தருவதற்க்காக ஒரு சிறு தொகையை கணக்கிட்டு பெற்றுகொள்கிறார்கள். இவையெல்லாம் மஸ்ஜிதில் தான் நடைப்பெறுகின்றது.அந்த கேம்ப்பில் தஹஜ்ஜத் தொழுகையை அவசியம் தொழச்செய்து,அதன் முக்கியத்துவத்தை கற்றுத்தருகிறார்கள். எல்லோரும் கூட்டாக சேர்ந்து தொழுது ஓதிக்கொண்டு இருப்பதோடு அல்லாமல், பயான்கள் சொல்வது அதை அவர்களும் எப்படியெல்லாம் பேசி பழகுவது, இஸ்லாமிய விஷயங்கள் சம்பந்தபட்ட வகையில் சில ஆக்டிவிட்டீஸ் என செய்து குழந்தைகளை மிகவும் உற்ச்சாகப்படுத்தி ஆர்வமூட்டி வருகிறார்கள்.இது மட்டும் அல்லாது… தற்போதைய ஒரு மாத காலமாக குர்ஆன் ஓதும் ஆண்பிள்ளைகளுக்கு மட்டும் ஸ்பெஷல் க்ளாஸாக புதன்கிழமை தோறும் மாலை ஒரு மணிநேரம் நடத்திவருகின்றார்கள்.அதன்பிறகு மக்ரிப் தொழுகைக்குபின்,சிறந்த தலைப்புகளில் பிள்ளைகளுக்கும்,பெரியவர்களுக்கும் புரியும்வண்ணம் பயான்கள் சொல்கின்றார் உஸ்தாத் ரஹ்மத்துல்லா என்பவர்.இவர்தான் இந்த இஸ்லாமிய வகுப்பு நடத்துவதற்க்கு தலைமை வகிப்பவர்.சிறந்த முறையில் செயல்படுத்தி கொண்டும் இருப்பது நன்கு தெரிய வருகின்றது.இது போன்று ஏழு இடங்களில் உள்ள பள்ளிகளிலுமே நடத்தி வருவதாக சொல்கிறார்கள்.இந்த நல்ல சந்தர்ப்பத்தை நாம் பயன்படுத்திக் கொண்டு நம் பிள்ளைகளுக்கு நல்ல விஷயத்தை கொடுத்தோம் என்ற திருப்தியோடு நமக்கும்,பள்ளிவாசல்களுக்கும் இடையே தூரம் அதிகமானாலும் இது போன்று அடிக்கடி சென்று நம் நேரத்தை நல்ல முறையில் செலவிடுவது என்பது நமக்கு மிகுந்த சந்தோஷத்தையும்,மனநிம்மதியையும் கொடுக்கின்றது.


நாம் இது போன்ற வெளிநாடுகளில் இருந்து கொண்டு எவ்வளவோ வெளியில் சுற்றுவது,அலங்கார பொருட்களை வாங்குவது,வெளியில் சாப்பிடுவது என நிறைய நேரங்களையும்,பணத்தையும் செலவழிக்கும் போது வாரத்திற்க்கு ஒரு முறையோ,இருமுறையோ நாம் இப்படி பள்ளிகளுக்கு சென்று நல்ல முறையில் நேரத்தை கழிப்பது என்பது மிகவும் நல்ல விஷயம்தானே…?இது போன்று நடைப்பெறும் வகுப்புகளுக்கு நாமும் நல்லமுறையில் ஒத்துழைப்பு தந்தோமேயானால் அவர்கள் தொடர்ந்து இன்னும் சிறப்பாக செயல்பட வசதியாக இருக்கும்.இந்த சிங்கப்பூரில் வசிக்கும் ஒரு சிலபேருக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போகலாம்.அதற்காகவே நான் இதை என் இல்லத்தில் பதிவு செய்கிறேன்.



எல்லாவல்ல இறைவன் எங்களுக்கு இதை நிலைக்க செய்திட தினம் தினம் இறைஞ்சுகிறேன்.







Friday, March 4, 2011

கொலஸ்ட்ரால் பற்றி அறிவோமா...




கொலஸ்ட்ரால் என்றால் என்ன?

கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது. Lipid + steroid = Cholestrol

80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.
கொலஸ்ட்ராலின் தன்மைகள்

கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு, எல்லா செல்களுக்கும் வடிவம் கொடுத்து, அவைகளுக்குச் சுவராக இருந்து, இயங்கச் செய்கிறது. முக்கியமாக மூளையின் வளர்ச்சிக்கும், செல்களின் செயல் பாட்டிற்கும் இந்த கொலஸ்ட்டிரால் இன்றியமையாததாக இருக்கிறது.

கல்லீரலில் (Liver) இருந்து பித்த நீர் சுரக்க கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு தேவைப் படுகிறது. இந்த பித்த நீர்தான் (bile) உணவிலுள்ள கொழுப்பையும், மற்றும் கொழுப்பில் கரையும் வைட்டமின்களான A,D,E,K முதலியவற்றையும் குடலில் ஜீரணமாக்கி, இரத்தத்தில் கலக்கச் செய்கிறது.

கொலஸ்டிரால், நம் உடம்பிற்குத் தேவையான முக்கியமான ஹார்மோன்களான உடல் வளர்ச்சி ஹார்மோன் (Growth hormone), ஈஸ்ட்ரஜன் (Estrogen) டெஸ்டோஸ்டிரான் (Testosterone) சுரப்பதற்கு தேவைப்படுகிறது.

நம் உடம்பிலேயே தயாராகும் வைட்டமின் ‘ஈ’ க்கு கொலஸ்ட்ரால் மிகவும் தேவைப்படுகிறது.
எது நல்ல கொலஸ்ட்ரால்?

 

LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால் HDLஎன்பது நல்ல கொலஸ்ட்ரால். ஏனென்றால் LDL ரத்தத்தில் அதிகமாக அளவு இருந்தால் இருதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இந்த LDL  – இரத்தக் குழாய்களின் உட்புறச் சுவர்களில் படிகங்களாக படிந்து (Cholesterol plaque) இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. இதற்கு  Atherosclerosis  என்று பெயர்.

ஆனால் HDL இப்படிப்பட்ட கொலஸ்ட்ரால் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனால் இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எப்பொழுதும் புரதச் சத்து துணையுடன் தான் இருக்கும் (Lipoprotein)



கொழுப்புகளின் வகைகளும், அவற்றின் அளவுகளும்.


Total Cholesterol <—>200 mgm%
மொத்த கொலஸ்ட்டிரால்

LDL Cholesterol <—>100 mgm%
குறை அடர்த்திக் கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

VLDLCholesterol <—>30 mgm%
மிக குறை அடர்த்தி கொழுப்புப் புரத கொலஸ்ட்டிரால்

Triglycerides <130 mgm%
முக்கிளிசரைடுகள்

HDLP Cholesterol <50 mgm %
மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்ரால்


மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mgm% க்கு மேலே செல்லச் செல்ல மாரடைப்பு வரும் வாய்ப்புகள் அதிகரித்துக்கொண்டே போகும். 10% அதிகமானால் 30% அதிக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மாரடைப்பு வந்தவர்கள் இதன் அளவை 180 mgm% க்கு குறைவாக வைத்துக்கொள்வது நல்லது.

குறை அடர்த்தி கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 100 mgm% அதிகமானால் 5 மடங்கு அதிகமாக மாரடைப்பு வர வாய்ப்புண்டு. இவர்களுக்கு பாரிச வாயு  நோய் வர வாய்ப்புகள் அதிகம்.

முக்கிளிசரைடுகள் (TGL) நாம் உண்ணும் கொழுப்பு உணவிலிருந்து கிடைக்கிறது. மேலும், எந்தக் கொழுப்பையும், சர்க்கரையையும் கூட நம் கல்லீரல் முக்கிளிசரைடுகளாக மாற்றும் சக்தி கொண்டுள்ளது. ஆதலால் 150 mgm% அளவுக்கு மேற்பட்டால் பன்மடங்கு அதிக அளவில் மாரடைப்பு வர வாய்ப்புண்டு. மிக அடர்த்திக் கொழுப்பு புரத கொலஸ்ட்டிரால் அளவு 35mgm% கீழே இருந்தால் மட்டுமே மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதன் அளவு 50 mgm% க்கு மேலே அதிகமாக இருந்தால் மாரடைப்பைத் தடுக்கின்றது. இரத்தக் குழாயில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்டிராலை, அப்புறப்படுத்தி இரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கவும் செய்கிறது.


கொழுப்புச் சத்துள்ள உணவு வகைகள்

பூரிதக் கொழுப்பு (Saturated fatty acid)

எந்த எண்ணெய் குளிர வைக்கும் பொழுது உறைந்து விடுகிறதோ, அவைகளில் மிக அதிக அளவு பூரிதக் கொழுப்பு உள்ளது. உதாரணம், நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய்.

ஐஸ்கிரீம், கேக், குக்கீஸ், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள் ஆகியவற்றிலும், முட்டையின் மஞ்சள் கரு, கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் உறுப்பு இறைச்சிகளான கல்லீரல், மண்ணீரல், மூளை போன்றவற்றில் பூரிதக் கொழுப்பு அதிகமாக உள்ளது.

இந்த உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதால், இதிலுள்ள கொழுப்பு நம் கல்லீரலில் அதிவேகமாக கொலஸ்ட்ராலாக மாறி, முக்கியமாக கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படும் LDL-cholesterol BP ஆக இரத்தத்தில் கலந்து 100 mgm% அளவைவிட மிகுதியாகிறது. இதனால் இவைகள் இரத்தக் குழாய்களில் படிந்து (Atherosclerosis) மாரடைப்பு, மூளை பாதிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட காரணமாகிறது.



கொலஸ்ட்டிரால் அசைவ உணவுகளில் மட்டும்தான் உள்ளதே தவிர எந்த தாவர உணவிலும் கிடையாது. அப்படியிருக்க அனைவருக்கும் எழும் சந்தேகம், பாலும், பாலிலிருந்து கிடைக்கும் நெய், வெண்ணெய், பாலாடை போன்ற உணவுப் பதார்த்தங்கள் எந்த பிரிவில் சேர்க்கப்படுகிறது என்பதே.

பாலில் பூரித கொழுப்பு இருப்பதால், உடலில் ஜீரணமாகி நேரடியாக ரத்தத்தில் கலந்துவிடுகிறது.

ஒற்றை அபூரிதக் கொழுப்பானது (Mono unsaturated fatty acid -MUFA) கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

பன்ம பூரிதக் கொழுப்பு (Poly unsaturated ftty acid -PUFA) சூரிய காந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோளம் எண்ணெய் ஆகியவற்றில் உள்ளது.

இந்த உணவுகளை அளவோடு சாப்பிட்டால் கெட்ட கொலஸ்ட்ரால் (LDL cholesterol) அதிகரிப்பதைத் தவிர்த்து நல்ல கொலஸ்ட்டிரால் (HDL Cholesterol) அளவை அதிகரிக்கும்.

அபூரிதக் கொழுப்பு அதிகம் உள்ள எண்ணெயை கொதிக்க வைக்கும்போது, அதிலுள்ள நற்குணங்களை இழந்து, பூரிதக் கொழுப்பாக (Saternated fatty acid) மாறுகிறது. இந்த முறையில் தயாராகும் உணவுகளான அப்பளம், வடை, சிப்ஸ், பிரெஞ்ச் பிரைஸ் முதலியவற்றை அதிக அளவு உண்டால் இரத்ததில் கெட்ட கொரஸ்ட்டிரால் கூடி, நல்ல கொலஸ்ட்ரால் குறைந்து இரத்தக் குழாய்களை அடைக்கும். ஒரே எண்ணெயைப் பல முறை காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தும்பொழுது இந்த தீமை பலமடங்கு உயர்கிறது.

ஒமேகா 3, ஒமேகா 6 என்பவை அதி முக்கிய கொழுப்பு வகைகள் ஆகும் (Essential fatty acid). இவைகளை நம் கல்லீரல் உற்பத்தி செய்ய முடியாது. உணவின் மூலமே இவை நமக்கு கிடைக்கிறது. இவைகள் இரத்தத்தில் உள்ள முக்கிளிசரைடுகள் குறைத்தும், நல்ல கொழுப்பை கூட்டியும், இரத்தம் உறையாமல் தடுத்தும், மாரடைப்பு வரும் வாய்ப்பையும் குறைக்கிறது.

இரத்தத்தில் ஒமேகா 3 ஒருபங்கு என்றால், ஒமேகா 6 இரு மடங்காக இருக்கும்.


ஒமேகா 3 உள்ள உணவுகள்


மீன், சால்மன் (Essential fatty acid), சுறா, வால்நட், சோயா, பிளாக்ஸ் விதைகள், அரிசி தவிட்டு எண்ணெய்

ஒமேகா 6 உள்ள உணவுகள்

சோளம், சூரியகாந்தி எண்ணெய், பருத்தி, வேர்க்கடலை, சோயாபீன்ஸ் மற்றும் விதைகளிலும், பருப்புகளிலும் கிடைக்கிறது.





எவ்வாறு நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பது?


நல்ல கொலஸ்ட்ரால் உருவாவதற்கு மூல காரணம் கல்லீரல்தான். அதனால் கல்லீரலை தூண்டக்கூடிய மருந்துகள், உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை பின்பற்றுவதன் மூலம் நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க முடியும்.





கீழ்க்கண்ட முறைகளை பின்பற்றுவதன் மூலம்
நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க முடியும்:


· சீரான உடற்பயிற்சி

· உடல் பருமனைக் குறைத்து சீரான எடையில் இருப்பது.

· புகைப் பிடிப்பதைத் தவிர்ப்பது.

· மது அருந்துவதைத் தவிர்ப்பது

· அதிகமான பழ வகைகளையும், நார்ச்சத்துள்ள காய்கறிகளையும் உணவில் சேர்ப்பது.

· அசைவ உணவு உண்பவர்கள், மீன் உட்கொள்வது நல்லது.

· பிட்ஸா, பர்கர், சிப்ஸ், பிரஞ்ச் பிரைஸ், அப்பளம், வடைபோன்றவற்றை தவிர்ப்பது .

· யோகாசன பயிற்சி செய்வது,

· தியானப் பயிற்சி செய்வது .




இதுவரை நீங்கள் படித்தது எனக்கு தோழி மூலமாக மெயிலில் வந்தது.அதையும் தவிர்த்து இன்னொரு விஷயங்களை சொல்லி கொள்ள விரும்புகிறேன்.
முடிந்த அளவிற்க்கு டென்ஷனை தவிர்த்து கொள்வது நல்லது.இன்றையை சூழலில்,அதுவும் ஐ.டி துறையில் உள்ளவர்களுக்கு இது கஷ்ட்டமான விஷயம்தான்.ஆனால் அது மனிதனின் உடலில் பல கோளாறுகளையல்லாவா ஏற்படுத்துகின்றது.முடிந்த வரை குறைத்து கொள்ளவேண்டும்.
மனதை அமைதிபடுத்ததான் ஆசனங்கள்,தியானம் என்ற முறையை கைய்யாள மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.
சிலர் என்னதான் கட்டுபாடும்,உடற்பயிற்ச்சியும் மேற்கொண்டாலும்,ஜெனிடிக்(குடும்ப வாகு)மூலம் அது இருந்து கொண்டே இருக்க வாய்ப்பு உண்டு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.அப்படி போன்றவர்கள் ஒமேகா _ 3 வகை மாத்திரையை உபயோகபடுத்தலாம் என்று தெரிவிக்கின்றனர்.
இவ்வளவு விஷயமும் ஆதாரம் இல்லாமலோ,அனுபவம் இல்லாமலோ சொல்லவில்லை.எனது கணவருக்கும் இந்த பிரச்சனை உண்டு.தொடர்ந்து மருந்து உபயோகப்படுத்தியும் உடற்பயிற்ச்சி மேற்கொண்டும் முற்றிலும் குறைந்த பாடில்லை.அது எனது மாமனாருக்கு இருந்ததால் இவருக்கும் இருந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்கள் மருத்துவர்கள்.தகுந்த 
ஆலோசனைபடியே இந்த ஒமேகா- 3 மருந்தை கடந்த சில மாதங்களாக உபயோகித்து வருகின்றார்.அதனால் தான் இந்த பதிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

இறைவன் எல்லோருக்கும் நோய் நொடியற்ற வாழ்வை தருவானாக....

Sunday, February 6, 2011

துபாயின் DSF கோலாகலம்





வளைகுடா நாடுகளில் வேகமான முன்னேற்றங்களை கொண்டுவந்ததில் யு.ஏ.இ அமீரகமும் ஒன்று.அதிலும் குறிப்பாக துபாயில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு வந்தது ஆச்சர்யமே..... சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து பார்வையிடும் நாடாகவும்,தங்கத்திற்க்கு பெயர் பெற்ற நாடாகவும் இருந்து வருவது குறிப்பிட தக்கது.



 இங்கே வருடந்தோறும் DSF எனப்படும் dubai shopping festival மிகவும் அனைவராலும் எதிர்ப்பார்க்கபடும் ஒன்றாகும்.இதை 1996 ம் வருடம் பிப்ரவரி 15-ம் தேதி முதன் முதலாக  கொண்டாடப்பட்டது.இதை தொடர்ந்து ஒவ்வொரு வருடமும்...ஒரு மாதக்காலம் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும்.துபாய் முழுவதுமே போகின்ற ரோடுகள் எல்லாம் வர்ண விளக்குகளாலும்,விளம்பர அட்டைகளாலுமே அலங்கரிக்கபட்டிருக்கும்.
எந்த மாலுக்கும்,கடைகளுக்கும் சென்றாலே DSF SALE என்றே அறிவிப்பு பலகைகள் மின்னும்.ஜனவரி முதல் பிப்ரவரி வரை வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு இது கண்கொள்ளா காட்சியாகவே இருக்கும்.
 ரிகா...,மொர்ரகாபாத் என்று அழைக்கப்படும் இரு பகுதிகளில் இந்த ஒரு மாதமும் நம் ஊர் திருவிழா போன்று தான் காட்சி அளிக்கும்.உள்ளே கார் கொண்டு போகும் அனைவரும் அவ்வளவு சீக்கிரம் அந்த ஏரியாவை விட்டு வெளியே வந்து விட முடியாது.... அவ்வளவு கூட்டமாக இருக்கும்.
பல கலை நிகழ்ச்சிகள்,பலவிதமான கடைகள்,ஆங்காங்கே பார்வையாளர்களின் பசியார சிறு சிறு கடைகள்,குழந்தைகளை கவரும் விளையாட்டு ஆவணங்கள்,சர்க்கஸ்கள் என சும்மா கலைகட்டும்னு வச்சிக்கங்க...
அதே போல் இந்த வருடமும் ஜனவரி 20 முதல் பிப்ரவரி 20 வரை என்று துபாய் அரசாங்கத்தால் முடிவு செய்யப்பட்டு,அதன் படியே நடைப்பெற்று கொண்டும் இருக்கின்றது....

நான்  இங்கு இருந்து கொண்டிருக்கும் இந்த பத்து வருடத்தில் முழுவதுமாக ரசித்து ஜாலியாக பார்த்தது என்னவோ  குழந்தைகள் வரும் வரைதான்.... அதன் பின் வெளியில் போவது என்பதே குறைந்து விட்டது...போனால் அடுத்து பத்து நாட்களுக்கு மருந்தும் கைய்யுமாகதானே இருக்க வேண்டியுள்ளது... சரி அது எதற்க்கு இப்ப...

இந்த வருடம் சரி வெளியில் போக வேண்டாம்... மால் எங்கேயாவது சென்று ஏதேனும் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் அங்கே செல்லலாம் என்று முடிவு செய்து சென்றோம்.( 5-ம் தேதி சனிக்கிழமை அன்று)எல்லா மால்களிலுமே ஏதேனும் கலை நிகழ்ச்சிகள்,ஆட்டம் பாட்டம் என நடந்து கொண்டுதான் இருக்கும்.எனவே நாங்கள் சில மாதங்களுக்கு முன்பு மிர்தீஃப் எனப்படும் இடத்தில் திறக்கப்பட்டிருந்த  சிட்டிசெண்ட்டருக்கு இதுவரை செல்லாததால் அங்கே சென்றோம்....


துபாயில் வித்தியாசமாகவும்,அழகாகவும் பல மால்கள் இருப்பது போன்றே... இந்த சிட்டி செண்ட்டரும் அதிலும் மிக பிரமாண்டமாகவும் இருந்தது.இரவு நேரங்களில் அந்த இடத்தை கடந்து செல்லும்போதே கார் பார்க்கிங்கின் விளக்கு வெளிச்சம் மட்டுமே கண்கூசும் அளவிற்க்கு அதிக அளவில் இருக்கும்.உட்புறம் கேட்க்கவா வேண்டும்..? 

























அப்பப்பா... மிக அழகான வடிவமைப்போடும்,மேல்பகுதிகளில் கண்கவரும் வெவ்வேறு வகையான டிசைன்களோடும் காட்சி அளித்தது.சுருக்கமா ஒரு கிராமத்தார் ஸ்டைலில் சொல்ல வேண்டுமானால்...  “இந்த இடத்தை முழுசா சுத்தி வரவே மூணு வேளையும் கட்டி சோறு கட்டிட்டுள்ள வரணும்” என்பது போன்ற இடமாகும்.... குழந்தைகளை கூட்டிட்டு முழுவதும் எங்களால் உலா வரமுடியவில்லை என்றாலும் ஓரளவிற்க்கு பார்வையிட்டு வந்தோம்.
மால்கள் என்றாலே வெளிநாடுகளில் நிச்சயம் இருப்பது ஃபுட் கோர்ட்டும்,ப்ளே ஸ்டெஷனும்தான்.இங்கும் அது இருந்தது.குழந்தைகளை விளையாட நாமும் அங்கே எட்டி பார்க்காமல் இருக்க முடியவில்லை.நுழைந்த ஆரம்பத்திலேயே வியக்கதக்க ஒரு காட்சி கண்முன்னே.... ஆமாங்க... ஒரு கண்ணாடி சூழப்பட்ட அறைக்குள் மனிதன் பறந்து கொண்டிருக்கின்றாரே... அவரை பிடித்து கொண்டு இன்னொருவரும் சேர்ந்து பறந்து கொண்டிருந்தார்.... என்னவென்று கவனிக்கையிலேதான் தெரிந்தது... அந்த பொழுதை களிக்கும் வித்தையின் பெயர் ஐ-ஃப்ளை(i fly) என்று... அதற்க்கென்று ஒரு உடையை அவர்களுக்கு கொடுத்து அணிய சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்திற்க்கு போய் நிற்க்க சொல்லி அதி வேகமான காற்றை செலுத்துகிறார்கள்.அது  அவர்களை பறக்கசெய்கின்றது.

சிறுவயதினருக்கும்,கொஞ்சம் பயப்படுவர்களுக்கும் ஒரு ஆள் பிடித்து கொள்கிறார்... தைரியசாலிகள் பிடிமானம் இல்லாமல் அதி வேகமாகவும் உயரமாகவும் பறக்கின்றார்கள்.என்னமா யோசிக்கிறாங்கன்னு நினச்சிட்டு நகர்ந்து போய் குழந்தைகளை விளையாட வைக்க ஆயுத்தமானோம்.


அரபியர்கள் ஐநூறு,ஆயிரம் திர்ஹம் என்று செலவழித்து விளையாடவைக்கும் இடமாச்சே.... இங்கு அதுவும் சர்வசாதாரணமாகவே காசு கரியாகும்... சரி நம் பிள்ளைகளும் கொஞ்சம் விளையாடி மகிழட்டும் என்று விட்டோம்.(அதுவே 100 திர்ஹம்) அந்த இடத்திலேயே அரபியர்களின் மெய்டுகளின் உதவியோடு ஒன்று,இரண்டு வயது குழந்தைகள் எல்லாம் விளையாட ஒரு தனி இடம் வேறு உண்டு....
இதெல்லாம் உங்க பார்வைக்கு ஒரு சில ஃபோட்டோக்கள் இங்கே கொடுத்துள்ளேன்....

இதெல்லாம் முடித்து வெளியே மற்றொரு இடம் நோக்கி சென்றோம்.
இங்கே DSF க்கான சிறப்பு நிகழ்ச்சியில் இன்று சீன,ஜப்பானியர்களின் கலைநிகழ்ச்சி நடைப்பெற்றது.இந்த நாட்டில் இவர்களின் பங்களிப்புகள் அதிகம் இருக்கும் என்றே சொல்லுவேன்.என்ன திறமை அவர்களுக்கு.... சின்ன சின்ன விஷயங்கள் கொண்டே நிறைய அபூர்வ அமைப்புகளை தருபவர்கள்.... இந்த நிகழ்ச்சியில் இசையின் அழகான வெளிப்பாடு.... அதிர வைக்கும் இசை இல்லை.... பிரமாண்டமான கீ போர்ட்,ட்ரம்ஸ் என்றெல்லாம் இல்லை.ஒரு புல்லாங்குழல்,அவர்களின் பாரம்பர்ய இசைகருவியாக இரண்டு..(எனக்கு அதன் பெயர் தெரியதுங்கோ....) அதை வைத்து அவர்களின் திறமையை வெளிபடுத்தியதை வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது... 


இதன் நடுவே நடனம் வேறு அழகிய உடைகளோடு அழகாக பொம்மை போன்று அசைந்தாடி சென்றனர்.ஏதோ இந்த வருட   DSF-ல் இதையாவது கண்டு களிக்க முடிந்ததே என்று நினைத்து அதனை உங்களுக்கு ஒரு சில படங்களை க்ளிக் செய்து வந்தேன்.இதோ அதுவும் உங்கள் பார்வைக்காக....
இன்னும் ரசிக்க எத்தனையோ விஷயங்கள் இந்த DSF-ல் இருக்கின்றது.... அவற்றையெல்லாம் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது பல புகைபடங்களோடு சொல்கிறேன்..... இப்போது பொறுமையாக இதை படித்தவர்களுக்கு நன்றியை சொல்லி கொண்டு விடைபெறுகிறேனுங்க.....


அன்புடன், 
அப்சரா.

Saturday, January 29, 2011

துபாயின் வானிலை மாற்றம்


நான் இந்த துபாயில் காலடி எடுத்து வைத்து  பத்து வருடங்கள் முடிவடைந்து விட்டன....
இங்கு நான் வந்த புதிதில் இருந்ததற்க்கும்,இப்போது இருப்பதற்க்குமே.... பலவித மாற்றங்களையும் இதுவரை பார்த்து கொண்டிருக்கின்றேன்.இந்த அமீரகம்... மிகவும் வேகமான முறையில் முன்னேறி வந்ததும்,சென்ற வருடம் ஏற்பட்ட வர்த்தக நிலவரத்தினால் துபாய் கொஞ்சம் அதிகமாகவே தளர்ந்து போனதும் அனைவரும் அறிந்ததே...
அதே போல் இந்த பாலைவனம் பகுதி சோலைவனமாக மாறிய பொழுதிலும்,திடீர் திடீரென ஏற்படும் வானிலை மாற்றங்கள்,அதனால் ஏற்படும் சில பாதிப்புகளும் அவ்வபோது நடப்பதுண்டு.அசுரத்தனாமான காற்றுகள் அடிக்கும்.சில நேரம் தொடர் மழையினால் தண்ணீர் வடிவதற்க்கு சரியானதொரு ஓட்டம் இல்லாமல் வெள்ளகாட்சியாக கூட காட்சியளிக்கும்.
 பனிக்காலம் வந்தாலோ..... விடியற்காலையில் பக்கத்தில் இருக்கும் கட்டிடமே தெரியாத வண்ணம் பனியால் எங்கும் சூழ்ந்திருக்கும்.இரவு பத்து மணிக்கு மேல் கூட சில நேரங்களில் கார் ஓட்டுபவர்களுக்கு தனக்கு முன்பு செல்லும் கார் தெரியாத வண்ணம் இருக்கும்.இதனால் நிறைய ஆக்ஸிடெண்ட் எல்லாம் நான் பார்த்து அனுபவபட்டதுண்டு.
இவை மட்டுமா....? வெயில் காலம் வந்தால் அது மிக பெரிய கொடுமையாக இருக்கும்.போகும் இடமெல்லாம் ஏஸி.... காரிலும் ஏஸி என்பவர்களுக்கே சிறிது நேரம் வெளியில் நிற்ப்பது தாங்க முடியாத அளவிற்க்கு இருக்கும்.ஆனால் நம் கண் முன்னே கட்டிட வேலையில் ஈடுபட்டவர்களை பார்க்க வேண்டுமே.... அல்லாஹு... மிகவும் பரிதாபமாக இருக்கும்.ஓய்வு நேரங்களில் அவர்கள் அப்படியே தலையில் துணியை போட்டு கொண்டு சுருண்டு தான் படுத்திருப்பார்கள்.
இப்படி ஒவ்வொரு மாற்றங்களிலும் ஒவ்வொரு விதமான மாற்றங்கள்,அனுபவங்கள்.
இதுவெல்லாம் இறைவன் நம்மை பார்த்து  “ஏய்... மனிதா..., தான் என்று அகங்காரத்தோடு ஆடாதே..... உன்னை சுற்றி இத்தனை விதமான இயற்க்கை சீற்றங்கள் நேருவதற்க்கான வாய்ப்புகள் உண்டு” என்று சொல்வது போன்று இருக்கும்.
 இவ்வளவும் ஏன் சொல்கிறேன் என்கிறார்களா...? காரணம் இருக்கின்றது.

நேற்றைய தினம்( 28 ம் தேதி வெள்ளிகிழமையன்று) எங்கள் குடும்பமும்,நண்பரின் குடும்பமும் சேர்ந்து மதியம் ஒன்றரை மணியளவில் ஆப்ரா என்று அழைக்கப்படும் boat,மற்றும் ship-ல் பயணிக்கும் இடத்திற்க்கு சென்றோம்.
அது ஒரு அழகான இடம்.கிளைமேட் நன்றாக இருக்கும் போதுதான் அங்கெல்லாம் போய் நன்றாக enjoy பண்ண முடியும்.எனவே நாங்களும் அந்த இடத்திற்க்கு போய் ஒரு வருடத்திற்க்கு மேலாக ஆகின்றது என்றே சென்றோம்.குளிரான காற்றாக இருந்து கொண்டிருந்தது.
ஒரு சிறிய  boat ஐ  எங்களுக்கு மட்டுமே என பேசி எடுத்து கொண்டு ஏறி அமர்ந்து ஒரு பத்து நிமிடம் நல்லா ஜாலியாக இருந்தோம்.

ஒரே பாட்டு,ஆட்டம் என குழந்தைகளும்,என் கணவர்,அவர் நண்பர்கள் அவர்கள் குழந்தையினர் எல்லாம் ஜாலியாக இருந்தனர்.boat -ம் நல்ல வேகமெடுத்து போய்கொண்டே இருந்தது.

போட் செல்ல செல்ல தூரத்தில் கருமையான மேகம் சுழன்று புகை மூட்டதோடு இருப்பதை கவனித்தோம். என்ன இது? அங்கே தீ விபத்து ஏதும் ஏற்பட்டுள்ளதா...? இல்லை மழை வரும் அறிகுறியா என்று எண்ணி பேசி கொண்டிருக்கும்போதே.... எங்கள் போட்டை நோக்கி பலமான காற்று வீசியது பாருங்க.... மண் அள்ளி எல்லோர் முகத்திலும் வீசியது.தண்ணிரின் துள்ளலை பார்க்கணுமே....(சுபஹானல்லாஹ்)அதனால் boat ல் ஏற்பட்ட ஆட்டம் வேறு.... எல்லோர் அடிவயிற்றிலும் ஒரு கலக்கம் ஏற்பட்டு விட்டது.குழந்தைகளெல்லாம் அழ ஆரம்பித்து விட்டன.அடுத்த சில நொடிகளில் அப்படியே அந்த இடமே இருள் சூழ்ந்தது போன்ற ஒரு நிலை.
என்ன செய்வதென்றே புரியாமல் தவிக்கும் நிலை.குழந்தைகளில் என் பெரிய பையன் தான் பெரியவன்.அவன் பயப்படவே இல்லை. “ அம்மா.... இதைதானே நேச்சுரல் கேலமிட்டீஸ் என படித்திருக்கின்றேன்.இப்போது அதை நேரில் பார்த்துவிட்டேன்.இதை பத்தி இன்னும் நல்லா இப்போது எழுதலாம் அம்மா...”என்றான்.இது இப்ப ரொம்ப முக்கியம் டா என்று ஒரு நிமிடம் நான் நினைத்தாலும்,இதையும் தைரியமா சமாளிக்கணும்.பாசிட்டிவ்வா நினைக்கணும்னு நம்ம சொல்லி கொடுப்பதெல்லாம் வொர்க்கவ்ட் ஆகுதேன்னு மனசுக்குள் ஒரு பக்கம் சந்தோஷம்.ஆனால் அப்பொழுதுள்ள சூழ்நிலையில் முழுதாக வெளிகாட்டிக்க முடியாமல் “ வெரிகுட் செல்லம்” என்று ஒரு வார்த்தையில் சொன்னேன்.மற்ற குழந்தைகளுக்கும் தைரியம் சொன்னான்.boat ஐ boat டிரைவர் நிறுத்தி கட்டியும் விட்டார். மெதுவாக ஓட்டி கொண்டு ஒரு ஓரத்தில் அந்த
இங்கே இறங்கி மேலே போனால் ஏதும் டாக்ஸி கிடைக்குமா என்று விசாரித்தோம்.கொஞ்சம் நடந்து போனால் கிடைக்கும் என்றார்கள்.இப்படியே பேசி கொண்டிருக்கும் போதே நாங்கள் இருக்கும் இடத்தை தாண்டி அந்த அசுர காற்று நகர்ந்து கொண்டிருந்தது.இருளும் விலக ஆரம்பித்தது.இருந்தாலும் இனி இந்த போட்டில் பயணிப்பது சரி வராது என்று முடிவெடுத்து இறங்கி டாக்ஸி பிடித்து எங்கள் கார் இருக்கும் இடத்தை நோக்கி வந்தோம்.
ரோடெல்லாம் பார்க்கணுமே.... மரம் விழுந்திருக்கின்றது.ஆடம்பரமான பெரிய விளம்பர தகடுகளெல்லாம் காரின் மேலெ விழுந்து கிடக்கின்றன..... இப்படியே ஒவ்வொரு இடமாக சேதபடுத்திகொண்டே அந்த காற்று சென்று கொண்டிருந்தது.ஏதோ ஆங்கில படம் ஒன்றில் இது போன்ற காட்சிகள் பார்த்த நினைவுதான் அப்போது வந்தது.எங்கெங்கே... அடுத்தது சுனாமிதானோ... என்று மனதிற்க்குள் என்னன்னவோ எண்ணங்கள்...ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாச்சுன்னு வச்சிக்கங்க....
இந்த சம்பவம் எங்களை பொருத்தவரை மரணபயத்தைதான் ஏற்படுத்தியது என்பேன். வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்ச்சி.எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்ன்னு தான் எடுத்துக்க முடிஞ்சது.
இதோ இன்று தைரியமாக இருந்த என் மகனுக்கும்,அழுது கொண்டே இருந்த என் மகளுக்கும் காய்ச்சல் வந்து விட்டது.என்னவென்று சொல்ல....? இது தேவையா... இது தேவையா... -ன்னு வடிவேலு ஸ்டைலில் முகத்துக்கு நேரே விரலை காட்டி கேட்டு கொண்டேன்.ஹூம்...
எல்லாவற்றிற்க்கும் அல்லாஹ் போதுமானவன்....

அன்புடன், 
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out