Friday, January 18, 2013

சிம்பிள் எண்ணெய் கத்திரிக்காய்



இந்த எண்ணெய் கத்திரிக்காய் எனது அம்மாவின் கைபக்குவத்தில் நான் ருசித்து சாப்பிடுபவற்றில் ஒன்று.அதை நான் செய்து உங்களோடு எனது பகிர்ந்து கொள்ள ஆசைபடுகின்றேன்

தேவையான பொருட்கள்:-

சின்ன கத்திரிக்காய்      -   5
சின்ன வெங்காயம்        -   1/2 கப்
தக்காளி                              -   2
பச்சைமிளகாய்                -   1
பூண்டு                                  -   3 பல்
புளி                                        - சிறிய எலுமிச்சை அளவு
மிளகாய்த்தூள்                  - 2 ஸ்பூன்
மஞ்சள்த்தூள்                    -  1/4 ஸ்பூன்
மல்லித்தூள்                       -  1 1/2 ஸ்பூன்
நல்லெண்ணை                 -   1 1/2 குழிகரண்டி
கடுகு,வெந்தயம்,மிளகு,சீரகம் -எல்லாம் சேர்ந்து ஒரு ஸ்பூன்
தேங்காய் பல் பல்லாக நறுக்கியது சிறிதளவு
கறிவேப்பிலை                _  ஒரு கொத்து

செய்முறை:-

கத்திரிக்காயை சிறியதாக இருப்பதால் காம்பை நீக்கிவிட்டு பாதியளவில் நான்காய் கீறி கழுவி வைத்துக்கொள்ளவும்.
சின்னவெங்காயத்தை நீளவாக்கில் இரண்டு மூன்றாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.அதே போல் தக்காளியையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

ஒரு சிறிய குக்கர் அல்லது வானலியில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,கடுகு,வெந்தயம்,மிளகு,சீரகம் இவற்றை போட்டு பொறிந்ததும் கறிவேப்பிலையை போட்டு பின்பு நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம்,பூண்டு,தக்காளியையும்,பச்சைமிளகாயை கீறியும் சேர்த்து நன்கு வதக்கவும்.

வதங்கியதும் மஞ்சள்,மிளகாய்த்தூள்களை போட்டு வதக்கி கொண்டே நறுக்கி வைத்திருக்கும் கத்திரிக்காயையும்,தேங்காய் பல்லையும் சேர்த்து சிறிது உப்பும் சேர்த்து குறைந்த தீயில் வைத்து நன்கு வதங்க விடவும்.

கத்திரிக்காய் வதங்கி எண்ணெய் மினுமினுப்போடு இருக்கும்போது மல்லித்தூளை சேர்த்து பிரட்டி விட்டு புளியை கரைத்து ஊற்றி விடவும்.
வானலியில் வைத்தால் வேகும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றவும்.குக்கரில் வைத்தால் சிறிதளவே ஊற்றினால் போதும்.உப்பு சரி பார்த்து விட்டு குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கி விடலாம்.எண்ணெய் மினுமினுப்போடு  இருக்க வேண்டும்.தண்ணியாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.அப்படியே தண்ணீர் நின்றாலும் சுண்டும் வரை மிதமான தீயில் அடுப்பில் வைத்து இறக்கவும்.
சுவையானதொரு எண்ணெய் கத்திரிக்காய் ரெடி.



இது பருப்பு சாதம்.கிச்சடி சாதம்,எல்லா வகையான பிரியாணி இவற்றிற்க்கு நல்லதொரு காம்பினேஷனாக இருக்கும்.

குறிப்பு:- இதற்க்கு நல்ல பிஞ்சு கத்திரிக்காயாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.அதே போல் எவ்வளவு நன்றாக வதக்குகிறோமோ அவ்வளவு நல்ல சுவையை தரும்.






















Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out