Monday, July 14, 2014

வாடா

இது ரமலான் கால சிறப்பு சிற்றுண்டியாக தரும் குறிப்பு.நான் அடிக்கடி செய்வதும் இந்த மாதத்தில்தான்.என்னவரின் மிகவும் விருப்பமானவற்றில் இதுவும் ஒன்று.அதை என் இல்லத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.



இது நாகை மாவட்டத்தில் மிகவும் விஷசமான ஒன்று.இதை பலரும் அறிந்திருக்க கூடும்.இதை இரண்டு,மூன்று விதமாக செய்வது வழக்கம்.ஒன்று தண்ணீர் ஊற்றிய சாதத்தில் தண்ணீரை வடிகட்டி விட்டு ரவை சேர்த்து பிசைந்து புளிக்க செய்வது.அதே போல் நெய் சாதம்,ஏன் பிரியாணியிலும் கூட செய்வது உண்டு.
இப்போது நான் செய்து காட்டியிருக்கும்  முறை பழைய காலத்தில் செய்யும் முறை...அதாவது பாரம்பர்ய முறை ஆகும்.இதில் நிறைய பேர் கொஞ்சம் வித்தியாசமாக செய்வார்கள்.நான் எங்கள் வீட்டில் செய்யும் முறைப்படி செய்து காண்பிக்க போகின்றேன்.சரி இனி செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி -  2 டம்ளர்
ரவை - 1/2 டம்ளர்
இறால் - 1/4 கப்
சின்ன வெங்காயம் - அரை கப் 
தேங்காய் துருவல் - இரண்டு மேசைக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2
எண்ணெய்  - வறுத்தெடுக்க + 1 மேசைக்கரண்டி 
சோடா உப்பு  - 1/2 தேக்கரண்டி 
உப்பு  - தேவையான அளவு 

செய்முறை 



பச்சரிசியை நன்கு கழுவி விட்டு தண்ணீர் நிறைய ஊற்றி ஆறு மணிநேரம் ஊற வைக்கவும்.
அதன் பின் நன்கு தண்ணீர் வடிய விட்டு மிக்ஸியில் ரவை பதத்திற்க்கு  அரைத்து வைத்துக் கொள்ளவும்.(சிறிதும் தண்ணீர் இருக்க கூடாது)
அதில் கால் பகுதியை தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து விட்டு அடுப்பில் வைத்து கிளறவும்.நன்கு கெட்டியாக வெந்து பசைபோல் ஆனதும்,இறக்கி விட்டு ஆறவிடவும்.
அதன் பின் அதில் மீதமுள்ள அரைத்த அரிசியையும்,ரவையையும்,சோடா உப்பு மற்றும் சிறிது உப்பையும் சேர்த்து நன்கு ஒன்று சேர பிசைந்து அமுக்கி மூடி 12 மணி நேரம் புளிக்க விடவும்.(பிசைந்துள்ளது கெட்டியாக இருக்க வேண்டும் சிறிதும் தண்ணீர் சேர்க்க கூடாது.)
புளித்தபின் மாவில் விரல் விட்டால் பொதக்கென்று உள் போகும்  அதான் பதம்.
இப்போது இறால் கலவையின் செய்முறையை பார்க்கலாம்.
இறாலை சுத்தம் செய்து விட்டு நன்கு கழுவி விட்டு பெரிய இறாலாக இருப்பின் ஒவ்வொரு இறாலையும் நான்கு துண்டுகளாக அரிந்து வைத்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயையும் பொடியாக அறிந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் அறிந்து வைத்திருக்கும் இறால்,வெங்காயம்,பச்சைமிளகாயை சேர்த்து,மஞ்ச்சள்த்தூளையும் சேர்த்து வதக்கவும்.சிறிது வதங்கும் போதே,தேங்க்காய்துருவலையும் சேர்த்து நன்கு வாசம் வர  வதக்கவும்.
அதன் பின் இறக்கி விட்டு கை பொறுக்கும் சூடு ஆனதும்,புளித்த மாவில் சேர்த்து நன்கு  ஒன்று சேர  பிசைந்து கொள்ளவும்.உப்பு சரி பார்த்து மேற்கொண்டு சேர்க்கவும்.


ஒரு  வானலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்,ஒரு பாலிதீன் கவரை கழுவி விட்டு அதில் சிறிய உருண்டையாக மாவை எடுத்து வைத்து தட்டி நடுவில் குழி பறித்து வடை போல் எண்ணெயில் மெதுவாக போட்டு இரு பக்கமும் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.இதே போல் எல்லா மாவையும் சுட்டு எடுக்கவும்.சுவையான மொறு மொறுப்பான  வாடா தயார்.



குறிப்பு:-))
********
1. இதே மீந்து போன தண்ணீர் ஊற்றிய சாதத்தில்,பிரியாணியில்  செய்யலாம்.
செய்முறை சற்றே வித்தியாசப்படும் அவ்வளவுதான்.சுவை ஒன்றாக தான் இருக்கும்.
2. இறால் இல்லாமல் இன்னும் சிறிது கூடுதலாக வெங்காயம் சேர்த்து செய்யலாம்.
3. சின்ன வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்க்கலாம். 
4.எண்ணெய் மிகவும் சூடு ஏறாமல் ஒரே அளவாக வைத்துக் கொள்ளவும்.
5.இறால் சிறியதாக இருப்பின் விரும்பியவர்கள் வடை போன்று தட்டிய பின் ஒவ்வொரு வடையிலும் எதிர் எதிர் புறமாக இரண்டு பதிய வைத்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கலாம்.


Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out