Monday, March 7, 2016

சிக்கன் புரிட்டோ


மெக்ஸிகோ உணவுவகைகளில் ஒன்றுதான் இந்த புரிட்டோ... இது கேள்விபட்டதோடு சரி... வெளியே நான் சாப்பிட்டு பார்த்தது இல்லை... என் பிள்ளைகள் கார்ட்டூனில் இது அடிக்கடி வருகிறது இது சாப்பிட்டு பார்க்கணும்னு ஆசையாக இருக்கிறது என்று சொல்லிக்கொண்டிருக்க உடனே நானும் செய்ய களம் இறங்கியாச்சு...
நெட்டில் பார்த்து பொதுவாக அவர்கள் செய்யும் விதத்தை  தெரிந்து கொண்டு அதையே கொஞ்சம் நம் விருப்பத்திற்கு ஏற்றார்போல் மாற்றி செய்து பார்த்தேன்... மிகவும் நன்றாக அமைந்தது...
என் பிள்ளைகளும் ஆசையாக சாப்பிட்டார்கள்... அதை எனது இல்லத்தில் பதிகின்றேன்....
சரி வாங்க செய்முறையை பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்
********** ****************
மேல் டார்ட்டிலாஸ் செய்ய:-)
*********************************
மைதா மாவு  - 1 1/2 கப் 
கார்ன் ஃப்ளார் மாவு - 1/2 கப் 
உப்பு - தேவையான அளவு 
நெய்  - 2 தேக்கரண்டி 
ஸ்டஃப்பிங்கிற்கு 
******************
சிக்கன் கைமா - 1/2 கப் 
பெரிய வெங்காயம் - 2
அரிந்த தக்காளி - 2 தேக்கரண்டி 
பொடியாக அரிந்த குடைமிளகாய் 
(சிகப்பு,மஞ்சள் ,பச்சை கலந்தது )} - 1/2 கப் 
சாதம்  - 1/2 கப் 
மிளகுத்தூள் - 1 1/2 தேக்கரண்டி 
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி 
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி 
சில்லி சாஸ் - 1 தேக்கரண்டி 
இத்தாலி ஸ்பைசஸ் - 1 1/2 தேக்கரண்டி 
ஒரிகேனோ - 1 தேக்கரண்டி 
பூண்டு (பொடியாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி 
ஆலிவ் ஆயில் - 3 மேசைக்கரண்டி 

செய்முறை 
************
1) முதலில் மாவை பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு நெய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிசறி விட்டு பிறகு வெதுவெதுப்பான நீரை கொண்டு மிருதுவாக மாவை நன்கு பிசைந்து ஈரத்துணி போட்டு மூடி வைத்து விடவும்.

2)ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு லேசாக வரும் போதே பூண்டை போட்டு வதக்கவும்.வாசம் வரும்போதே நறுக்கிய மற்ற காய்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
3)அதில் சிக்கன் கைமாவை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு வதக்கவும்.
4)சிக்கன் நிறம் மாறி வெந்தது போன்று வந்ததும்,தூள் மற்றும் சாஸ் வகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

5)வாசம் வர வதக்கியதும் சாதம் சேர்த்து நன்கு ஒன்று சேர  கிளறி  தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும். நன்கு ஒன்று சேர்ந்து  தண்ணீர் வற்றிய நிலையில் ரெடி ஆனதும் இறக்கி வைத்து ஆற விடவும்.
6)இப்போது பிணைந்த மாவை மீடியமான உருண்டைகளாக்கி விட்டு,சப்பாத்தி போன்று மெல்லியதாக இட்டு தவாவில்  இரு பக்கமும் லேசாக  எண்ணெய் தடவி சுட்டு எடுத்து வைத்து கொள்ளவும்.


7)இனி அந்த டார்டிலாஸின் நடுவில் ஸ்டஃப்பிங் வைத்து சுருட்டி லேசாக தவாவில் வைத்து எடுத்து இரண்டாக கட் செய்து பரிமாறவும்.

குறிப்பு:-)
*இந்த ஸ்டஃப்பிங்கில் ரெட் பீன்ஸை வேக  வைத்தும் முக்கியமாக சேர்ப்பார்கள். 
*வெஜிடேரியன்ஸ் சிக்கனை தவிர்த்து ரெட் பீன்ஸை அதிகம் சேர்த்து கொள்ளலாம்....
*விரும்பினால் இதில் சீஸும் துருவி சேர்த்துக் கொள்ளலாம்



Monday, August 24, 2015

செட்டிநாடு சிக்கன் குழம்பு

சிக்கன் குழம்பு பெரும்பாலும் ஒரே செய்முறையில் செய்வது வழக்கம் என்றாலும்,ஒரு சில ஊர்களில் செய்யும் செய்முறை பலரையும் கவரும்படி இருக்கும்.
அதிலும் செட்டிநாடு ஸ்பெஷல் உணவு என்பது நம் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம்... அதில் பலவகை சமையல் குறிப்புகள் உண்டு... அப்படி சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றில் செய்து காண்பிக்கப்பட்ட சிக்கன் குழம்பு செய்முறை என்னை மிகவும் கவர்ந்தது.... அந்த முறையில் செய்தும் பார்த்தேன்... மிகவும் சுவையாக இருந்தது.... பலருக்கும் தெரிந்திருந்திருக்கலாம்...
இருப்பினும் தெரியாதவர்களுக்கு இது உபயோகமாக இருக்குமல்லவா? அதுவுமில்லாமல் ஒரே செய்முறையில் செய்யாது இப்படி மாற்றி செய்து பார்ப்பது பலருக்கும் பிடிக்கும் என்றே நம்புகிறேன்...
சரி வாங்க செய்முறைக்கு போவோம்....


                 செட்டிநாடு சிக்கன் குழம்பு

தேவையான பொருட்கள்
**********. ***************
சிக்கன் - 3/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
மஞ்சள்த்தூள் - 1/2 தேக்கரண்டி(tsp)
மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி(tsp)
மல்லித்தழை - சிறிதளவு




வறுத்து அரைக்க:-)
****************
சின்ன வெங்காயம் - அரை கப்
பெரிய வெங்காயம் - 1
சீரகம் - 2 தேக்கரண்டி(tsp)
பட்டை - இரண்டு இன்ச் அளவு - 2
கிராம்பு - 3
காய்ந்த மிளகாய் - 4
பச்சைமிளகாய் - 3
தேங்காய் துருவல் - 1/4 கப்
கறிவேப்பிலை - 2 கொத்து
இஞ்சி - ஒரு இன்ச் அளவு - 3 துண்டுகள்
பூண்டு - 10 பல்
மிளகு - 2 தேக்கரண்டி(tsp)
மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி(tbsp)
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
தாளிக்க;
*******
எண்ணெய் - அரை கப்
நெய் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1தேக்கரண்டி
வெந்தயம் - 1 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை - 1



செய்முறை:-)
************



ஒரு வானலியில் நல்லெண்ணெயை ஊற்றி வறுக்க கொடுத்தவற்றில் பட்டை கிராம்பு முதலில் போட்டு பின்பு சீரகம் சேர்த்து பொன்னிறமாகும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.
நன்கு பொன்னிறமாகி வாசம் வந்ததும்,சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் அறிந்து சேர்த்து வதக்கவும்.
கொஞ்சம் வதங்கியதுமே நறுக்கிய இஞ்சி,பூண்டு,காய்ந்த மிளகாய் மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அதுவும் வாசம் வரும்போது தேங்காய் துருவல்,மிளகு சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பின் கறிவேப்பிலை இலைகளையும், மல்லித்தூளையும் சேர்த்து நன்கு பிரட்டி வாசம் வர வதக்கி விட்டு இறக்கி வைத்து ஆற விடவும்.

ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவைகளை போட்டு பொறிந்ததும், அரிந்த வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.வதங்கியதும்,தக்காளியை அரிந்து சேர்த்து வதக்கி விட்டு மஞ்சள்த்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கியதும்,கழுவி வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து மிதமான தீயில் வைத்து வதங்கவிடவும்.
கோழி வதங்கும் நேரம் ஆற வைத்திருக்கும் வறுத்தவற்றை மிக்ஸியில் நைசாக தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
இப்போது வதங்கிய கோழியில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை ஊற்றி குழம்புக்கு தேவையான அளவு தண்ணீரும் உப்பும் சேர்த்து மல்லிதழை நறுக்கி சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.
சுவையான மணமான செட்டிநாடு சிக்கன் குழம்பு தயார்....


***இது நெய் சாதம்,பரோட்டா,சப்பாத்தி,இடியாப்பம் இவற்றிற்கு சூப்பராக இருக்கும்...***


Saturday, December 6, 2014

வெப் கேக் (குக்கர் முறை)

இந்த குக்கர் கேக் செய்முறையை நான் ஊரில் இருக்கும் எனது உறவினர்களுக்காக செய்து பார்த்த முறை.... மைக்ரோவேவ்,ஓவன் இதெல்லாம் இருந்தால் தான் கேக் செய்யமுடியும் என்று இல்லாமல் இவ்வாறும் சுலபமாக செய்யலாம் என்று சொல்லி அவர்களும் செய்து பார்த்து சந்தோஷமடைந்தார்கள்.எனவே இதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.
 

தேவையான பொருட்கள்                   

மைதா  - 1 ¼ கப்

பட்டர்   - 50 கிராம்

பொடித்த சீனி – 1 1/2 கப்

முட்டை   - 2

கொகோ பவுடர்  - 2 மேசைக்கரண்டி

பேக்கிங் பவுடர்  - 1 தேக்கரண்டி

பால்      - 2 மேசைக்கரண்டி

தண்ணீர்  - 2 மேசைக்கரண்டி

வெனிலா எஸன்ஸ் – 1 தேக்கரண்டி

உப்பு ( பேக் செய்ய) – 1 ½ (அ) 2 கப்


செய்முறை

பட்டர்,முட்டை,எஸன்ஸ்,பால் இவையெல்லாம் ரூம் டெம்பரேச்சரில் இருக்கும்படி வைத்துக் கொள்ளவும்.ஐந்து லிட்டர் குக்கரில் உப்பை பரவலாக கொட்டி அதில் ஒரு ஸ்டாண்ட் அல்லது ஒரு சிறிய தட்டோ வைத்து மூடியில் லப்பரோ,வெய்ட்டோ போடாமல் குக்கரை மூடி அடுப்பில் மிதமான தீயில் வைத்து சூடு படுத்த வைக்கவும்.ஒரு சில்வர் அல்லது சுதேசி பாத்திரத்தை குக்கரின் உள்ளே வைக்கும் அளவிற்க்கு உள்ளதை எடுத்து அதன் உள்ளே வெண்ணெயை உள் அடி பாகமும்,சுற்றிலும் தடவி விட்டு ஒரு மேசைக்கரண்டி அளவு மைதாவை போட்டு எல்லா இடத்திலும் மாவு ஒட்டும் அளவிற்கு சுத்தி தட்டி விடவும்.ஒட்டியது போக மிச்சம் இருப்பின் மாவை கொட்டி விடவும்.


மைதாவையும்,பேக்கிங் பவுடரையும் நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும்.ஒரு அகலப்பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் சீனியை போட்டு எலெக்ட்ரிக் அல்லது ஹாண்ட் விஸ்க்கால் நன்கு மிருதுவாகும் வரை அடித்துக் கொள்ளவும்.பிறகு அதில் முட்டையை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும்.இப்போது அதில் வெனிலா எஸன்ஸ்,கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு அடித்து விட்டு,கொஞ்சம் கொஞ்சமாக மாவையும் பாலையும் சேர்த்து நன்கு கலந்துவிட்டு வைக்கவும்.


மற்றுமொரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொண்டு அதில் கொக்கோ பவுடரை கட்டியில்லாமல் கலந்துக் கொண்டு,அதில் கலந்து வைத்திருக்கும் கலவையில் பாதியை அதில் ஊற்றி நன்கு கட்டியில்லாமல் கரண்டியால் கலந்து விட்டு வைக்கவும்.வெண்ணெய் தடவிய பாத்திரத்தில் கொக்கோ கலவையில் சின்ன குழி கரண்டியால் எடுத்து மெதுவாக நடுவே ஊற்ற வேண்டும். இன்னொரு குழிக் கரண்டியால் வெள்ளை கலவையை அதன் மேலே மெதுவாக ஊற்றவும்.இப்படியே மாற்றி மாற்றி முழுவதுமாக ஊற்றி விட்டு பாத்திரத்தை தட்டி சமபடுத்திவிட்டு,குக்கரை திறந்தால் சூடு வந்திருக்கும்.அதன் உள்ளே மெதுவாக வைத்து மறுபடியும் குக்கரை மூடி வைக்கவும்.முதல் 40 நிமிடம் வரை குக்கரை திறக்க கூடாது.அதன் பிறகு திறந்து பார்த்தால் நன்கு உப்பியிருக்கும் அதன் நடுவே ஒரு குச்சியை தண்ணியில் கழுவி விட்டு குத்தி வெளியே எடுத்துப் பார்த்தால் எதுவும் ஒட்டாமல் வர வேண்டும்.அப்படியிருப்பின் அடுப்பை அணைத்து விடவும்.இல்லை கொஞ்சம் பிசுபிசுப்பாக குச்சியில் ஒட்டி இருந்தால் மறுபடியும் ஒரு பத்து நிமிடம் வைத்து விட்டு,அதன் பின் சரிப்பார்த்துவிட்டு இறக்கவும்.


பாத்திரத்தை வெளியே எடுத்து ஐந்து நிமிடம் கழித்து கத்தியால ஓரத்தை ஒரு முறை சுத்தி தளர்த்திவிட்டு ஒரு தட்டில் கவிழ்த்தால் அழகாக வந்து விடும்….
இதை அப்படியே துண்டுகள் போட்டும் சாப்பிடலாம்.மிகவும் டேஸ்டாக இருக்கும்.இல்லையென்றால் ஐஸிங் செய்து அலங்கரித்து சாப்பிடலாம்.ஐஸிங் முறையை அடுத்த பதிவில் பார்க்கவும்.

 குறிப்பு:-

1.இதே குக்கர் செய்முறையில் எல்லாவிதமான கேக்கும் செய்யலாம்.நன்கு மிருதுவாக வரும்.பிஸ்கட்டும் செய்யலாம்.அதன் குறிப்பை பின்பு போடுகின்றேன்.

2.சைவப் பிரியர்கள் முட்டைக்கு பதிலாக அரை டின் மில்க்மெய்ட் ஊற்றி செய்யலாம்.அதற்க்கேற்றார் போல் இனிப்பை குறைத்துக் கொள்ள வேண்டும்.இல்லை எக் ரீப்ப்ளேஸர் என்று கிடைக்கின்றது அதையும் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.
3.மாவை மாற்றி மாற்றி ஊற்றியப்பின் ஒரு கத்தியால் டிசைனுக்காக வெப் போல் ஆங்காங்கே இழுத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று செய்துள்ளேன்.இதுவே அப்படியே இழுத்து விடாமலும் வைக்கலாம். அது ஜீப்ரா டிசைனாக இருக்கும்.அப்படி செய்ததில் ஒரு பீஸ் இதோ உங்கள் பார்வைக்கு....





Tuesday, September 30, 2014

ருமாலி ரொட்டி

சமீபகாலமாக ... சப்பாத்தி வெரைட்டி லிஸ்ட்ல புதுசா நான் சேர்த்து கொண்டது தான் இந்த ருமாலி ரொட்டி.நாம் வீட்டில் ஏதும் புதுசா ட்ரை பண்ணோம்னா அதை மறுபடியும் செய்யலாம்னு ஒரு ஆசை வருவதற்க்கு காரணமாக இருப்பது கணவரும்,குழந்தைகளும்தாங்க..... அவங்க சாப்பிட்டு சூப்பர் சொன்னா போதும்.... இந்த சூப்பர் வார்த்தை கணவர்களிடம் எதிர்ப்பார்க்க முடியாது... முடிக்க போறாங்கன்னு நினைக்கும்போது இன்னொன்று அவர் எடுத்து சாப்பிடுறாங்க பாருங்க.... அது தாங்க நம்ம சக்ஸஸ்....அப்படி எங்க வீட்டு டின்னர் லிஸ்ட்டில் இதுவும் சேர்ந்துடுச்சுங்க...
இதன் செய்முறையை பார்ப்போம்.


தேவையான பொருட்கள்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆட்டா - 1 கப்
மைதா  -  1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
நெய் (அ) எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
உப்பு  - தேவைக்கேற்ப

செய்முறை
~~~~~~~~~~~


ஒரு பாத்திரத்தில் மைதாவையும்,ஆட்டாவையும் கலந்து தேவைக்கேற்ப உப்பும் கலந்து தண்ணீர் சிறிது சிறிதாக ஊற்றி நல்ல சாஃப்ட்டாக ஆகும் வரை நன்கு பிசையவும்.கெட்டியாக இல்லாமல் கொஞ்சம் இளகுவாக சாஃப்ட்டாக இருக்க வேண்டும்.
நன்கு பிசைந்த மாவை ஈரத்துணி கொண்டு மூடி ஒரு பதினைந்து நிமிடம் வரை வைத்து விடவும்.
பிறகு அந்த மாவின் சிறிது அரிசி மாவி தூவிக் கொண்டு ஒரு தடவை பிசைந்து விட்டு சிறிய எலுமிச்சை அளவு உருண்டைகள் போட்டுக் கொள்ளவும்.10 முதல் 12 உருண்டைகள் வரும்.
இப்போது சப்பாத்தி கட்டையில் இரண்டு உருண்டைகளை உள்ளங்கைய்யை விட கொஞ்சம் பெரியதாக அரிசி மாவை தூவி வார்த்துக் கொண்டு,அதில் ஒரு சப்பாத்தியின் மேல் நெய்யோ, எண்ணையோ கைய்யில் தொட்டு முழுவதுமாக தடவி விட்டு மற்றொரு சப்பாத்தியை அதன் மேல் வைத்து ஓரத்தை லேசாக அழுத்தி ஒட்டி விடவும்.இதே போல் எல்லா உருண்டையும் செய்து அதேன் மேல் அரிசி மாவை தூவி வைத்து கொள்ளலாம்.


நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து சூடு படுத்தவும்.
ஒட்டி வைத்திருக்கும் ஒரு சப்பாத்தியை எடுத்து அரிசி மாவை தூவி மிகவும் மெல்லியதாக வார்க்கவும்.அதை நன்கு சூடான தவாவில் போடவும்.
அதில் லேசாக பபுள் வர ஆரம்பிக்கும் போது திருப்பி போட்டு லேசாக துணியைக்கொண்டு அழுத்திவிட்டால் நன்கு உப்பும் அடியும் லேசாக சிவந்திருப்பின் எடுத்து விடவும்.
எடுத்து தட்டில் வைத்ததும் ரொட்டியின் ஓரத்தை பார்த்தோமேயானால் எடுத்து வந்தது போலோ இல்லை பிரிப்பதற்க்கு ஏதுவாகவோ இருக்கு.அதை கொண்டு இரண்டாக பிரித்தால் அழகாக இரண்டு ரொட்டியாக வந்துவிடும்.அது ஒவ்வொன்றையும் முக்கோணமாக மடித்து வைத்து விடவும்.இப்படியே எல்லா சப்பாத்தியையும் செய்யவும்.
சுட்டதும் ஹாட்பேக்கில் வைத்து விட்டோமெயானால் ஒரு நாள் முழுக்க வைத்திருந்தாலும் கொஞ்சம் கூட சாஃப்ட்டே குறையாமல் சூப்பராக இருக்கும்.
இதற்க்கு தொட்டுக்கொள்ள எந்த க்ரேவியும் சூப்பராக இருக்கும்.
என் குழந்தைகளுக்கு சிக்கன் க்ரேவியும்,தால் மக்கனியும் ரொம்ப பிடிக்கும்.


முக்கியமாக கவனிக்க வேண்டியவை:-))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
1. மாவை நன்கு சாஃப்ட்டாக பிசைவது முக்கியம்.
2. நெய்யோ,எண்ணையோ   சேர்க்காமல் இருப்பதே இதன் ஸ்பெஷல்.
3.சுடும்போது தவா நன்றாக சூடாக இருப்பது முக்கியம்.
4.ஒவ்வொரு ரொட்டியையும் சுட்டு எடுக்கும் போது அடுப்பை குறைத்து விட்டு மீண்டும் ரொட்டி இட்டு போடுமுன் தவாவை நன்கு சூடுபடுத்தி விட்டு போடுவது முக்கியம்.




Sunday, August 24, 2014

சாக்லெட் ப்ரவ்னிஸ்

இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.வீட்டில் பார்ட்டி என்றால் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் அயிட்டமாக இதை செய்து வைக்கலாம்.பெரியவர்கள் கூட மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
ஈத் பெருநாள் வந்தாலே சிங்கப்பூரில் ஒரு மாதம் கொண்டாட்டம் தான்.மலாய் மக்களின் பழக்கப்படி இந்த ஒரு மாதமும் குடும்பத்துடன் தங்கள் அனைத்து உறவினர்களின் வீட்டிற்கும் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.அப்படி எல்லோரும் போக,வர இருப்பதால் எல்லோர் வீட்டின் டைனிங் டேபிளிலும் டப்பா டப்பாவாக ஸ்னேக்ஸ் செய்தோ,வாங்கியோ வைத்திருப்பார்கள்.வருபவர்கள் அதில் இருப்பதை டேஸ்ட் செய்து விட்டு காஃபியோ,ஜூஸோ குடித்துவிட்டு சென்று விடுவார்கள்.
இப்ப எதுக்கு இந்த கதை என்கிறீர்களா?அந்த மாதிரி வைத்திருக்கும் ஸ்னேக்ஸில் இதுவும் ஒன்று.அதை எனது இல்லத்தில் பதிவிடவே விரும்புகிறேன்.

இப்போது அதன் செய்முறையை பார்க்கலாமா?

               

தேவையான பொருட்கள்
**********************
டார்க் சாக்லெட் - 100 கிராம்
பட்டர் - 1/4 கப்
மைதா(அ)ஆல் பர்ப்பஸ் ஃப்ளோர் - 3/4 கப்
கொக்கோ பவுடர் - 2 மேசைக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
கண்டன்ஸ்ட் மில்க் - 1/2 டின்
பொடித்த சீனி - 1/2 கப்
வால்நட் - பொடியாக நறுக்கியது ஒரு கையளவு



செய்முறை
**********
பட்டர் ரூம் டெம்ப்ரேச்சரில் இருக்க வேண்டும்.
பட்டரையும்,சாக்லெட்டையும் மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு மைக்ரோவேவ் ஹையில் ஒரு நிமிடம் வைத்து எடுத்தோமேயானால் பட்டர் உருகியும்,சாக்லெட் லேசாக உருகியும் இருக்கும்.அந்த நிலையில் அதை வெளியில் எடுத்து நன்கு கிளறிவிட்டோம் என்றால் நன்கு சாக்லெட் அந்த சூட்டிலேயே கரைந்து விடும்.அதை ஒன்று சேர கலந்து விட்டு அதில் கண்டன்ஸ்ட் மில்க்கையும் ஊற்றி கலந்து விட்டு பிறகு மைதா,கொக்கோ பவுடர்,பேக்கிங் பவுடர் மூன்றையும் ஒன்றாக கலந்து ஒரு முறை சலித்து விட்டு சாக்லெட் மிக்ஸில் சீனியையும்,இந்த மாவையும் சேர்த்து நன்கு ஒன்று சேர கலந்து விடவும்.அதன் பின் நறுக்கிய வால்நட்டில் பாதியை இதில் கலந்து விடவும்.
இப்போது ஓவனை 180டிகிரியில் முற்சூடு செய்யவும்.கேக் ட்ரேயில் பட்டர் முழுவதுமாக தடவி விரும்பினால் பட்டர் பேப்பர் போட்டுவிட்டு அதில் இந்த கலவையை பரவலாக கொட்டி  ஒரு இன்ச் அளவு உயரம் இருக்கும்படி தட்டி விட்டு மீதி இருக்கும் வால்நட்டை தூவி விடவும்.
அதை முற்சூடு செய்த ஓவனில் வைத்து 30 முதல் 35 நிமிடம் வரை வைத்து எடுக்கவும்.(எனக்கு 30 நிமிடத்தில் ரெடியாகி விட்டது.எனவே அவரவர் ஓவனிற்கு தகுந்தார் போல் நேரத்தைப் பார்த்துக்கொள்ளவும்.)
இதன் நடுவில் டூத் பிக் வைத்து சோதித்து பார்த்து விட்டு வெளியே எடுத்து விடவும்.சூடாக இருக்கும் போதே துண்டுகள் போட்டு எடுத்து விட்டு ஆறியதும் பாக்ஸில் போட்டு வைத்து கொள்ளலாம்.


இளஞ்சூடாக இருக்கும் போதே சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.இதன் டேஸ்ட் கேக்குகள் போல் இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக சிவ்வியாக இருக்கும்....
முயன்று பாருங்களேன் நிச்சயம் பிடிக்கும்.

குறிப்பு:)
*******
சாக்லெட் ,பட்டரை டபுள்பாயிலர் முறையில் உருக்கச்செய்யலாம்.

Monday, July 14, 2014

வாடா

இது ரமலான் கால சிறப்பு சிற்றுண்டியாக தரும் குறிப்பு.நான் அடிக்கடி செய்வதும் இந்த மாதத்தில்தான்.என்னவரின் மிகவும் விருப்பமானவற்றில் இதுவும் ஒன்று.அதை என் இல்லத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.



இது நாகை மாவட்டத்தில் மிகவும் விஷசமான ஒன்று.இதை பலரும் அறிந்திருக்க கூடும்.இதை இரண்டு,மூன்று விதமாக செய்வது வழக்கம்.ஒன்று தண்ணீர் ஊற்றிய சாதத்தில் தண்ணீரை வடிகட்டி விட்டு ரவை சேர்த்து பிசைந்து புளிக்க செய்வது.அதே போல் நெய் சாதம்,ஏன் பிரியாணியிலும் கூட செய்வது உண்டு.
இப்போது நான் செய்து காட்டியிருக்கும்  முறை பழைய காலத்தில் செய்யும் முறை...அதாவது பாரம்பர்ய முறை ஆகும்.இதில் நிறைய பேர் கொஞ்சம் வித்தியாசமாக செய்வார்கள்.நான் எங்கள் வீட்டில் செய்யும் முறைப்படி செய்து காண்பிக்க போகின்றேன்.சரி இனி செய்முறை விளக்கத்தை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி -  2 டம்ளர்
ரவை - 1/2 டம்ளர்
இறால் - 1/4 கப்
சின்ன வெங்காயம் - அரை கப் 
தேங்காய் துருவல் - இரண்டு மேசைக்கரண்டி 
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் 
பச்சை மிளகாய் - 2
எண்ணெய்  - வறுத்தெடுக்க + 1 மேசைக்கரண்டி 
சோடா உப்பு  - 1/2 தேக்கரண்டி 
உப்பு  - தேவையான அளவு 

செய்முறை 



பச்சரிசியை நன்கு கழுவி விட்டு தண்ணீர் நிறைய ஊற்றி ஆறு மணிநேரம் ஊற வைக்கவும்.
அதன் பின் நன்கு தண்ணீர் வடிய விட்டு மிக்ஸியில் ரவை பதத்திற்க்கு  அரைத்து வைத்துக் கொள்ளவும்.(சிறிதும் தண்ணீர் இருக்க கூடாது)
அதில் கால் பகுதியை தனியே ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு அதில் மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து விட்டு அடுப்பில் வைத்து கிளறவும்.நன்கு கெட்டியாக வெந்து பசைபோல் ஆனதும்,இறக்கி விட்டு ஆறவிடவும்.
அதன் பின் அதில் மீதமுள்ள அரைத்த அரிசியையும்,ரவையையும்,சோடா உப்பு மற்றும் சிறிது உப்பையும் சேர்த்து நன்கு ஒன்று சேர பிசைந்து அமுக்கி மூடி 12 மணி நேரம் புளிக்க விடவும்.(பிசைந்துள்ளது கெட்டியாக இருக்க வேண்டும் சிறிதும் தண்ணீர் சேர்க்க கூடாது.)
புளித்தபின் மாவில் விரல் விட்டால் பொதக்கென்று உள் போகும்  அதான் பதம்.
இப்போது இறால் கலவையின் செய்முறையை பார்க்கலாம்.
இறாலை சுத்தம் செய்து விட்டு நன்கு கழுவி விட்டு பெரிய இறாலாக இருப்பின் ஒவ்வொரு இறாலையும் நான்கு துண்டுகளாக அரிந்து வைத்து கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயையும் பொடியாக அறிந்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் இரண்டு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி அதில் அறிந்து வைத்திருக்கும் இறால்,வெங்காயம்,பச்சைமிளகாயை சேர்த்து,மஞ்ச்சள்த்தூளையும் சேர்த்து வதக்கவும்.சிறிது வதங்கும் போதே,தேங்க்காய்துருவலையும் சேர்த்து நன்கு வாசம் வர  வதக்கவும்.
அதன் பின் இறக்கி விட்டு கை பொறுக்கும் சூடு ஆனதும்,புளித்த மாவில் சேர்த்து நன்கு  ஒன்று சேர  பிசைந்து கொள்ளவும்.உப்பு சரி பார்த்து மேற்கொண்டு சேர்க்கவும்.


ஒரு  வானலியில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெயை ஊற்றி சூடு வந்ததும்,ஒரு பாலிதீன் கவரை கழுவி விட்டு அதில் சிறிய உருண்டையாக மாவை எடுத்து வைத்து தட்டி நடுவில் குழி பறித்து வடை போல் எண்ணெயில் மெதுவாக போட்டு இரு பக்கமும் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.இதே போல் எல்லா மாவையும் சுட்டு எடுக்கவும்.சுவையான மொறு மொறுப்பான  வாடா தயார்.



குறிப்பு:-))
********
1. இதே மீந்து போன தண்ணீர் ஊற்றிய சாதத்தில்,பிரியாணியில்  செய்யலாம்.
செய்முறை சற்றே வித்தியாசப்படும் அவ்வளவுதான்.சுவை ஒன்றாக தான் இருக்கும்.
2. இறால் இல்லாமல் இன்னும் சிறிது கூடுதலாக வெங்காயம் சேர்த்து செய்யலாம்.
3. சின்ன வெங்காயத்திற்கு பதிலாக பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்க்கலாம். 
4.எண்ணெய் மிகவும் சூடு ஏறாமல் ஒரே அளவாக வைத்துக் கொள்ளவும்.
5.இறால் சிறியதாக இருப்பின் விரும்பியவர்கள் வடை போன்று தட்டிய பின் ஒவ்வொரு வடையிலும் எதிர் எதிர் புறமாக இரண்டு பதிய வைத்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கலாம்.


Tuesday, April 22, 2014

ப்ரொக்கொலி வித் ஸ்ப்ரவ்ட்


இந்த ப்ரோக்கொலியும் ,ஸ்ப்ரவ்ட்டும் நமது தமிழர்களின் சாப்பாடு வழக்கத்தில் இல்லாத ஒன்று.குறிப்பாக சொல்ல வேண்டுமானால் சீனர்கள் விரும்பி சாப்பிடும் வகைகளில் இதுவும் ஒன்றாகும்.இதனை நம்மை போன்ற வெளிநாட்டு வாழ்  தமிழர்கள் சமைத்து சாப்பிட பழகியும் விட்டார்கள்.அப்படிதான் நானும் அடிக்கடி   செய்து சாப்பிட ஆரம்பித்து விட்டேன்.உடம்புக்கும் மிகவும் நல்லது.இது போன்று பிரட்டியோ ,சூப் வைத்தும் சாப்பிடலாம்.நூடுல்ஸ்களிலெல்லாம் பல காய்களோடு இந்த ஸ்ப்ரவ்ட்டையும் சேர்த்து சாப்பிடலாம்.சுவையாக இருக்கும்.இனி  செய்முறை  பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் 

ப்ரொக்கொலி பூ  -  சிறியதாக ஒன்று 
ஸ்ப்ரவ்ட்   -  ஒரு கப் 
பூண்டு   -  பெரியதாக 2 பல் 
பச்சைமிளகாய் - ஒன்று 
சில்லி சாஸ்  -  ஒரு தேக்கரண்டி 
எண்ணெய்   -  ஒரு மேசைக்கரண்டி 

செய்முறை 



ப்ரோக்கொலியை சிறு சிறு பூவாக அரிந்து வைத்துக் கொள்வோம்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் அரிந்து வைத்திருக்கும் பூவை போட்டு ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து ஒரு கொதி கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
இரண்டு நிமிடம் கழித்து நீரை வடிக்கட்டி விட்டு குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
ஸ்ப்ரவ்ட்டையும் கழுவி வைக்கவும்.
பூண்டையும்,பச்சைமிளகாயையும் கழுவி விட்டு நன்கு நைசாக தட்டி வைக்கவும்.
ஒரு வானலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,நசுக்கி வைத்திருக்கும் பூண்டு மிளகாயை சேர்த்து வதக்கவும்.
உடனே ப்ரொக்கொலி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பின்பு அதில் ஸ்ப்ரவ்ட் சேர்த்து சில்லி பேஸ்ட்டும்,தேவையான அளவு உப்பும்  சேர்த்து நன்கு  பிரட்டி விட்டு குறைந்த தீயில் மூடி போட்டு ஒரு நிமிடம் வேக விடவும்.
அதன் பிறகு அடுப்பை விட்டு இறக்கிவிடவும்.
மிகவும் வெந்து விடாமல் அரைவேக்காடாக இருப்பின் மிகவும் உடம்பிற்கு நல்லது சாப்பிடவும் மிகவும் சுவையாகவே இருக்கும்.
இதில் வாசத்திற்கு இறால்,கருவாடு இரண்டு வாசத்திற்கு சேர்க்கலாம்.
ரசம்,சாம்பார்,இப்படி எல்லாவற்றிற்க்கும் சாப்பிட நன்றாகவே இருக்கும்.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out