Wednesday, November 9, 2011

மட்டன் சூப்



தேவையான பொருட்கள்
   
மட்டன் நெஞ்செலும்பு ........................... 2 துண்டுகள்
சின்ன வெங்காயம் .................................. பத்து
தக்காளி .......................................................... ஒன்று
இஞ்சி,பூண்டு அரவை .............................. ஒரு தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் ............................................... ஒரு ஸ்பூன்
மிளகுத்தூள் .................................................. ஒன்றரை ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் .................................... கால் ஸ்பூனுக்கும் குறைவாக
பட்டை ............................................................ மிக சிறிய துண்டு
நல்லெண்ணை............................................ மூன்று தேக்கரண்டி
மல்லிதழை .................................................. சிறிதளவு


செய்முறை




மட்டன் எலும்பை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து கழுவி விட்டு மிக்ஸியில் விட்டு விட்டு ஒன்றிரண்டாக (நைசாக இல்லாமல்)சுற்றி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
தக்காளியையும் அரைத்து வைத்துக் கொள்ளவும்.



ஒரு சிறிய குக்கரை அடுப்பில் வைத்து ,எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை போட்டு பிறகு அரைத்து வைத்திருக்கும் வெங்காயம்,தக்காளியை சேர்த்து வதக்கி விட்டு பின்பு இஞ்சி,பூண்டு அரவையும் சேர்த்து நன்கு வதக்கவும்.



ஓரளவு எண்ணெய் மினுமினுக்க வதங்கியதும்,பச்சைமிளகாய் சேர்த்து கூடவே தூள் வகைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி,மட்டன் எலும்பையும் சேர்த்து ஒரு நிமிடம் சிம்மிலேயே வதக்க விடவும்.
பிறகு இரண்டு டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி விட்டு தேவையான அளவு உப்பும்,அரிந்த மல்லி தழையும் சேர்த்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும் வெய்ட் போட்டு அடுப்பை குறைந்த தீயில் பத்து முதல் பதினைந்து நிமிடம் வரை வைத்து பின்பு இறக்கவும்.



சுவையான முறையில் மட்டன் சூப் தயார்.
இட்லி,தோசை,சாதம் இவைகளில் ஊற்றி சாப்பிடவும் சரி,சும்மாவே குடிக்கவும் சரி சுவை நன்றாகவே இருக்கும்.
இந்த செய்முறையிலேயே ஆட்டு கால்,கோழி இவைகளிலும் சூப் செய்யலாம்.அதற்க்கேற்றார் போன்றே சுவை நன்றாக இருக்கும்.மட்டன்,சிக்கன் இவைகளின் அளவிற்க்கேற்றார் போல் இதர பொருட்களின் அளவையும் அதிகரித்து கொள்ள வேண்டும்.


நன்றி.


Saturday, November 5, 2011

ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்




அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இவ்வலைப்பூவில் இருக்கும் அனைத்து இஸ்லாமிய சகோதர ,சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.


இஸ்லாமியர்களின் மிக பெரிய மற்றும் இறுதி கடமையான ஹஜ் கடமையினை இந்த வருடம் நிறைவேற்ற சென்றிருக்கும் அனைவருடைய ஹஜ்ஜையும் எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொண்டு,அவர்களின் முன் பின் பாவங்களை போக்கிடுவானாக என நாம் அனைவரும் இறைவனிடம் இறைஞ்சுவோம்.
அதே போல் நாம் அனைவருக்கும் இக்கடமையை இனிதே நிறைவேற்ற கூடிய பாக்கியத்தினை இறைவன் அருள வேண்டும் என நிய்யத்தோடு துஆ செய்வோமாக....

Wednesday, November 2, 2011

எங்கள் வீட்டின் கை வண்ணம்



எனது இல்லத்தில் இதற்க்கு முன் எனது கைவண்ணம் என்று சில எனக்கும் தெரிந்தவற்றில் செய்ததை உங்களோடு பகிர்ந்து கொண்டிருந்தேன்.அப்பகுதியிலேயே எனது மாமியார் நிறைய விஷயங்களை கற்றறிந்தவர் அவரது திறமைகளையும் இங்கே வெளீயிடுவதாக சொல்லியிருந்தேன்...சரி சரி எதற்க்கு இத்தனை ஃப்ளாஷ்பேக் மேட்டருக்கு வா என்கின்றீர்களா...?அதாங்க.... இங்க தாங்க மேட்டரே.... எனது மாமியார் நிறைய கைவேலப்பாடுகள் செய்வதில் சகலகலா வல்லவர்.தனக்கு தெரிந்தவைகள் என்று மட்டுமல்லாது புதுமையாக பார்ப்பவற்றையும் தெரிந்து கொண்டு செயல்பட முனைபவர்.
இதற்க்கென்று மெனக்கெட்டு வாங்கி வந்து செய்வது என்று ஆரம்பிக்க மாட்டார்.ஏதேனும் வேஸ்ட் பொருட்களோ,உடைந்த பொருட்களோ கையில் அகப்பட்டால் அவ்வளவுதான் அவருக்கு டிங்.... என்று ஒரு மணி அடிக்க என்னவெல்லாம் இதில் செய்யலாம் என்று பல யோசனைகள் பிறக்கும். 
அப்படி செய்த விஷயங்கள் நிறைய உண்டு.அதில் சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ளவே இங்கு வந்தேன்.




இந்த பூக்கள் கொத்து செய்தது எப்படி தெரியுமோ...?ஸ்பாஞ் பேப்பர் பல கலர்களில் விற்க்கும் அதை வாங்கி செய்வார்கள் இல்லையா..?அப்படி எல்லாம் என் மாமியார் வாங்க சிரமபடவே இல்லை.சில காஸ்ட்லி ஷர்ட்டுக்கு,ட்ரஸ்க்கு உள்ளே வைத்து இது போன்ற தாள்கள் வரும் அல்லவா..?அதையெல்லாம் சேகரித்து வைத்து தான் அதில் இந்த ரோஸ்,அதற்க்கான இலைகள் எல்லாம் செய்து அதனை கலரிட்டு வைப்பார்கள்.அந்த பூங்கொத்தின் கீழே ஃப்ளவர் வாஷ் எதனால் உருவானதென்றால் எலெக்ட்ரானிக் பொருட்களை சுற்றி வரும் தெர்மோகோல் மூலம் செய்ததாக்கும். ஏனோ ஃபோட்டோவை சரியாக என்னால் எடுக்க முடியவில்லை.நேரில் இது இன்னும் அழகாக இருக்கின்றது.
இது மட்டுமல்லாது,தையல் வேலைகளிலும் நன்கு சிறந்தவர்.தலையணையை கூட மீன் வடிவத்தில்,ஹார்ட் வடிவத்தில் என தைத்திருப்பார்.குழந்தைகள் விரும்பும் வண்ணம் இருக்கும்.அது தற்போது கைவசம் இல்லாததால் இங்கே வெளியிட முடியவில்லை.முடிந்த போது அதை இங்கே சேர்த்து விடுகிறேன்.சரி அடுத்தது என்ன என்று பார்ப்போமா...?
இவைகள் எங்கள் வீட்டில் அலங்கரிக்கபட்டிருப்பவைகள்.
இது ஒரு மரப்பலகையை கொண்டு செய்திருப்பது என்று ஓரளவு கனித்திருப்பீர்கள்.அதன் ஓரங்களில் இருப்பது என்ன தெரியுமோ...?தானிய வகைகள்.அரிசி,பச்சைபயிர்,வெள்ளை ,மற்றும் கறுப்புஉளுந்து,கேழ்வரகு,சீரகம்,மிளகு,கடுகு,கோதுமை,தனியா,கிராம்பு,எள் இவைகளை கொண்டு அலங்கரித்ததாகும்.இதனை எனது சிறிய நாத்தினாரும்,அவள் கஸினும் படித்து கொண்டிருக்கும் போது சேர்ந்து செய்தது.நடுவில் இருக்கும் ஃபோட்டோ எனது மகளுடையது.மேலே கண்ணாடியை கொண்டு கூட ஃப்ரேம் செய்யவில்லை.ஆனாலும் அப்படியே அழகாக சுவரில் இன்னும் காட்சி அளிக்கின்றது.அவர்கள் செய்த மற்றுமொரு கைவண்ணம் தான் கீழே நீங்கள் பார்க்கும் அழகிய வீடு.

இது ஐஸ் குச்சியினால் செய்த வீடாகும்.இதை இன்னும் அழகுபடுத்தியிருந்தார்கள்.அவை எல்லாம் கொஞ்சம் விழுந்துவிட்டது.இது போன்று இன்னும் பல கைவண்ணங்கள் எங்கள் வீட்டின் ஆங்காங்கே அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.அவற்றை மற்றுமொரு பகுதியினில்,நேரம் கிடைக்கும் போது பகிர்ந்துக் கொள்கிறேன்.

*** நன்றி ***


Saturday, October 22, 2011

பொன்னாங்கன்னி கீரை சார்

என்னதான் காலங்கள் மாறி,உணவு பழக்க வழக்கங்கள் மாறினாலும்,நம்ம பாரம்பர்ய கை மணத்திற்க்கான சுவையே தனிதான்.சுவை மட்டும் அல்லாது உடம்பிற்க்கும் நல்லதொரு பலனை தரக்கூடியதாக இருக்கும்.
அதுவும் எங்கள் ஊர் கிராம பகுதிகளில் நிறைய சின்ன சின்ன சமையல்களெல்லாம் கை வைத்தியம் நிறைந்ததாக இருக்கும்.அவற்றில் ஒன்றை தான் இந்த குறிப்பாக வெளியிடுகிறேன்.




தேவையான பொருட்கள்


பொன்னாங்கன்னி கீரை --------------- நான்கு கைய்யளவு
முருங்கை கீரை இலை --------------    இரண்டு கப்
கெட்டி தேங்காய் பால் --------------- ஒரு டம்ளர்
அரிசி கழநீர்   ---------------------------- இரண்டு டம்ளர்
சின்ன வெங்காயம் -------------------- அரை கப்
பச்சைமிளகாய் ------------------------- இரண்டு
சீரகம் -------------------------------------- அரை ஸ்பூன்
உப்பு   -------------------------------------- தேவைக்கேற்ப  


செய்முறை


பொன்னாங்கன்னி கீரையை நல்ல இலைகளாக பார்த்து நன்கு கழுவி வைத்துக் கொள்ளவேண்டும்.


அரிசி கழநீர் என்பது சாப்பாடு சமைக்கும் அரிசியை நல்ல தண்ணீர் ஊற்றி கலைந்து அந்த தண்ணீரை இருத்து தனியே வைத்துக் கொள்வதற்க்கு பெயர் தான்.இந்த தண்ணீரில் தூசு ஏதும் இருப்பின் வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.திக்காக இருக்கும்.இது ஒரு தனி மணம் கொடுக்கும்.


பச்சைமிளகாயை கீறி வைத்துக் கொள்ளவும்.சின்ன வெங்காயத்தை உரித்து கழுவி மெல்லியதாக அரிந்து வைத்துக் கொள்ளவும்.


இப்போது அந்த தண்ணீரை (நாம் சொன்ன அளவு) ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொண்டு அதனுடன் சீரகம்,பச்சைமிளகாய்,வெங்காயம் தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து விடவும்.
இரண்டு கொதி தள தளவென கொதித்ததும்,அதில் அலசி வைத்திருக்கும் பொன்னாங்கன்னி கீரையை போட்டு வேக விடவும்.


நன்கு கொதித்து பாதியளவு வெந்து கொண்டிருக்கும்போதே முருங்கை இலையையும் சேர்த்து கொதிக்க விடவும்.


இரண்டும் வெந்ததும்(கைய்யால் மசித்து பார்த்தால் தெரிந்து விடும்) அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் பால் விட்டு கலக்கி மூடி வைத்து விடவும்.
மிகவும் சுவையான சத்தான கீரை சார் ரெடி.


இது அல்சர் போன்ற வயிற்று புண் உள்ளவர்களுக்கு செய்து கொடுப்பது நல்லது.நல்ல பலன் கிடைக்கும். சாப்பிட நன்றாகவும் இருக்கும்.
தேங்காய் பால் வேண்டாம் என நினைப்பவர்கள் வெறுமெனவே சாராக சாப்பிடலாம்.ஆனால் தேங்காய்பாலும் வயிற்று,வாய் புண் உள்ளவர்களுக்கு நல்லதே....பொன்னாங்கன்னியும்,சரி முருங்கை கீரையும் சரி உடம்பிற்க்கு மிகவும் சத்தானது.மருத்துவ குணம் கொண்டது.
ஒரு வயது குழந்தைகள் முதற்க் கொண்டு வயதானவர்கள் வரை சாதத்தில் ஊற்றி சாப்பிட உகந்தது.
வெறும் முருங்கை இலை, மணத்தக்காளி இலையிலும் இதே போன்று செய்யலாம்.


***நீங்களும் முயன்று செய்து பார்த்துட்டு சொல்லுங்களேன்.இதற்க்கு தொட்டுக் கொள்ள சுருக்கென்று ஒரு மருத்துவமிக்க துவையல் இருந்தால் எப்படி இருக்கும்.....?நல்லாயிருக்குமுல்ல.... இதோ அடுத்து அந்த குறிப்போடு வருகிறேன்.



Wednesday, July 27, 2011

புடலங்காயில் இத்தனை சிறப்பா...???



ம் முன்னோர்கள் ஆரோக்கியம் அளிக்கும் செடி, கொடி, மர வகைகளை வீட்டைச் சுற்றியும், தோட்டங்களிலும் வளர்த்து பயன்பெற்று வந்தனர்.  இன்னும் கூட கிராமங்களில் கொல்லைப் புறத்தில் கீரைகள், கறிவேப்பிலை, முருங்கை, அகத்தி, அவரை, புடலை, கத்தரி, வெண்டை, எலுமிச்சை, தென்னை என பலவற்றை வளர்த்து அதன் பயன்களை முழுமையாகப் பெற்று வந்தனர். அதனால் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன்  வாழ்ந்தனர்.  ஆனால் தற்போது வீட்டைச் சுற்றி சிமெண்ட் தளங்களை அமைத்துவிட்டோம்.  தோட்டம் ஏற்படுத்தி மேற்கண்ட செடி கொடிகளை வளர்ப்பதற்கு யாருக்கும் பொறுமையும் இல்லை.  நேரமும் இல்லை.
இப்படி நம் வீட்டில் விளைந்த இயற்கையான காய்கறிகளை உதறிவிட்டு செயற்கை ரசாயன உரங்கள் இட்டு வளர்க்கப்படும் காய் கறிகளை வாங்கி உண்ண வேண்டிய  சூழ்நிலையில் உள்ளோம்.  இதனால் நோயின் பிடியில்  சிக்கி அன்றாடம் மருந்து மாத்திரைகளுடன் அலைகின்றோம்.   காய்கறிகளில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நேரடியாகக் கிடைக்கின்றன.
இத்தகைய காய்களில் நாம் அனைவரும் அறிந்த புடலங்காய் பற்றியும் அதன் மருத்துவப் பயன் பற்றியும் அறிந்துகொள்வோம்.

இன்றும் கிராமங்களில் கொல்லைப் புறத்திலும், தோட்டங்களிலும், பந்தல் போட்டு வளர்க்கப்படும் கொடி வகைதான் புடலை.  இதன் காய் நன்கு நீண்டு காணப்படும்.  

புடலங்காய் இந்தியாவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது. இது  சுவை மிகுந்த காயாகும்.  இதனை தென்னிந்தியாவில் உணவில் அதிகம் சேர்க்கின்றனர்.

புடலையில், இளத்தல், கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்புடல் என பல வகைகள் உள்ளது. இவற்றில் கொத்துப்புடல் மட்டுமே உணவாகப் பயன்படுகிறது.

இதனை புடல், சோத்தனி, புடவல் என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.


இதன் காய் மட்டுமே உணவாகப் பயன்படுத்தப் படுகிறது.


புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லதல்ல.  பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயையே பயன்படுத்த வேண்டும்.

புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும்.  அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.  

இப்போது புடலங்காயின் பயன்கள் என்னவென்று பார்க்கலாமா...?


* உடலுக்கு வலு கொடுக்கும்.  தேகம் மெலிந்து  இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து வந்தால், தேக மெலிவு மாறி உடல் பருமனடையும்.

* அஜீரணக் கோளாறைப் போக்கி எளிதில் சீரணமாக்கும்.  நன்கு பசியைத் தூண்டும்.

* குடல் புண்ணை ஆற்றும்.  வயிற்றுப்புண், தொண்டைப்புண் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட நோயின் பாதிப்புகள் குறையும்.

* இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும்.  

* மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.

* நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

* சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். 

* விந்துவைக் கெட்டிப்படுத்தும்.  ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும்.  உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.

* பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும்.  கருப்பைக் கோளாறுகளைப் போக்கும்.

* கண் பார்வையைத் தூண்டும்.

* 
இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்..

இத்தகைய சிறப்புத் தன்மை கொண்ட புடலங்காயை அவ்வப்போது பயன்படுத்தி ஆரோக்கியம் பெறுவோமே.



எனவே புடலங்காய் கூட்டு,பொறியல் இவைகளை பார்த்து பத்தடி தள்ளி செல்லாமல் நமது உணவுகளில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளலாமே...




*** முக்கிய அறிவிப்பு ***)))  இந்த தகவல்கள் அனைத்துமே நண்பர் மூலம் மெயிலில் எனக்கு வந்ததாக்கும்.அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.(ஒரு சிலருக்காவது பயன்பெரும்படி இருக்குமேன்னு ஒரு நப்பாசைதான்.)






Friday, June 3, 2011

மீண்டும் வலைப்பூவை தேடி....,


வலைப்பூவில் வசிக்கும்  அன்புள்ளங்கள் கொண்ட தோழிகள் அனைவருக்கும் எனது அன்பான சலாத்தினை(அனைவர் மீதும் சாந்தியும்,சமாதானமும் உண்டாகட்டுமாக...!) தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னடா இத்தனை நாள் சொல்லாமல் கொள்ளாமல் எங்கேடா போய் தொலைந்தால் என்று சில உள்ளங்கள் நினைத்திருக்கும்.
அவார்டை கூட திடீர் என்று அதுவும் அவசர அவசரமாக அல்லவா கொடுத்து  விட்டு செல்லும் சூழ்நிலை.

என்ன செய்ய??? 11 வருடமாக துபாய்க்கும்,தாயகத்திற்க்கும் மாறி மாறி பயணித்தவள்,,,,, தாயகமே  நிரந்தரம் என செல்ல வேண்டுமேயானால் எவ்வளவு ஏற்பாடுகள்,எத்தனை அலங்கோலங்கள் என ஓடியிருக்கும் என பாருங்களேன்.இதில் என்னவரை விட்டு பிரிந்து எப்படி நானும்,குழந்தைகளும் நாட்களை  கடத்த போகிறோம் என்ற டென்ஷன் வேறு....இந்த டென்ஷன்களுக்கு இடையில் என்னருமை தோழிகளுக்கு நினைவு பரிசாக கொடுக்க வேண்டுமே என்று கொடுத்ததுதான் இந்த சான்றிதழ்கள்....ஆனால் இவற்றை கொடுத்து விட்டு விடுப்பு விண்ணப்பம் சொல்ல மறந்து விமானம் ஏறி பறந்து வந்தாச்சு....

இப்போது இறைவனின் உதவியால்,இந்த மூன்று மாதங்களாக ஸ்கூல் அட்மிஷன் உறவினர்களோடு கலந்துரையாடல்,உடன்பிறப்புகளோடு அரட்டை,மனம் விட்டு பேச்சு,பெற்றோர்களுக்கும்,மாமியார் வீட்டினர்களுக்கும் ஏதோ நம்மால் முடிந்த உதவிகள் கடமைகள் என வண்டி ஓடிட்டு இருக்கு.இதை விட பெரிய விஷயம் என் பிள்ளைகளின் ஸ்கூல் அட்மிஷன் கிடைப்பதற்க்கு அலைந்த பாடுதான்..... அப்பப்பா.... அதற்க்கென ஒரு தனி பதிவே போட எண்ணியுள்ளேன்.இவை எல்லாம் இனிதே முடிந்த பின்பு தான் இந்த இரண்டு நாட்களாக நெட் கனெக்‌ஷன் கிடைக்க பெற்றுள்ளேன்.
எனவே தான் மெதுவாக என் இல்லத்திற்க்குள் எட்டி பார்த்து ஒரு ஹலோ சொல்லிட்டு போகலாம் என வந்தேன்.(இவ்வளவு நீட்டுக்கா ஹலோ சொல்றதுன்னு யாரும் கேட்டுடகூடாது.... எதையும் விலக்கி சொல்லணும் இல்லையா அதான் இப்படி.....)


ஏதோ இனி என்னால் முடிந்த போது வந்து என் கருத்துக்களையும்,பதிவுகளையும் கொடுத்து விட்டு செல்கிறேன்.இப்போதைக்கு விடைப்பெறுகிறேன்.  ஆமா...இந்த பூங்கொத்து எதற்க்குன்னு யாரும் கேட்கலையே ????அதையும் நானே சொல்கிறேன்.மூன்று மாதம் கழித்து பேசறோம்.ஒரு வித மலர்ச்சியோட பேசலாம் என்றும்,நமது நட்பை இந்த பூக்களை போல செழிக்க செய்யலாம் என்றும் தான்.... என்னங்க முடியலையா.... சரி சரி மீண்டும் சந்திப்போம்.

Wednesday, March 30, 2011

அன்பான சான்றிதழ் தர அழைக்கிறேன்...

இந்த சான்றிதழை 
சகோதரி.திருமதி.ஜலீலா அவர்களுக்கும்,(சமையல் அட்டகாசங்கள்)
சகோதரி.திருமதி.ஆசியா உமர் (சமைத்து அசத்தலாம்)
சகோதரி.கீதா ஆச்சல் ( என் சமையல் அறையில்)அவர்களுக்கும்....
 அன்போடு அளிக்கின்றேன்....


இந்த சான்றிதழை சகோதரி.திருமதி.மஹி(மஹிஸ் ஸ்பேஸ்)
சகோதரி.திருமதி.ரேவா (காரசாரம்)
சகோதரி.திருமதி.இமா (இமாவின் உலகம்)
சகோதரி.திருமதி.சங்கீதா நம்பி (Recipe-excavator)
சகோதரி.திருமதி.சவிதா (சவிதா’ஸ் கிச்சன்)அவர்களுக்கும்
அன்போடு வழங்குகிறேன்.

இந்த சான்றிதழினை...,
சகோதரி.திருமதி.ஸாதிகா (எல்லா புகழும் இறைவனுக்கே)
சகோதரி.திருமதி.மலிக்கா (கலைச்சாரல் மற்றும் நீரோடை)
சகோதரி.திருமதி.அஸ்மா (பயணிக்கும் பாதை) 
சகோதரி.திருமதி.ஹூஸைனம்மா (ஹூஸைனம்மா)அவர்களுக்கும்
அன்போடு வழங்குகின்றேன்.

இந்த சான்றிதழினை...,
சகோதரி.திருமதி.அதிரா (என் பக்கம்)
சகோதரி.திருமதி.ஆமினா (குட்டி சுவர்க்கம்)
சகோதரர்.திரு.ஜெய்லானி (ஜெய்லானி) அவர்களுக்கும்...,
அன்போடு வழங்குகின்றேன்.


இந்த சான்றிதழினை இந்த வலைப்பூவுலகத்தில் பயணிக்கும் அத்தனை சகோதாரி,சகோதரர்களுக்கு அன்போடு வழங்குவதில் பெருமைபடுகின்றேன்.

என் வருகையை ஏற்று வந்ததில் மிக்க மகிழ்ச்சி.
அனைவருக்கும் நன்றி.








Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out