எங்கள் ஊர் பகுதிகளில் அஞ்சு கறி சோறுன்னு சொல்லுவாங்க...
அதில் நெய் சோறு,தால்ச்சா,இந்த வெள்ளை மட்டன் குருமா,தக்காளி இனிப்பு பச்சடி,சீனிதுவை(இதன் குறிப்பை ஒரு நாள் பார்க்கலாம்)இவையெல்லாம் அடங்கியிருக்கும்.மிகவும் பிரபலமாக காலம்காலமாக செய்யபட்டு வரும் சமையல் ஆகும்.இதன் முழுபடத்தையுமே ஒரு தடவை (இன்ஷா அல்லாஹ்) வெளியிடுவேன்.இப்ப இந்த வெள்ளை மட்டன் குருமாவை பற்றி பார்க்கலாம்.*** தேவையான பொருட்கள் ***
மட்டன் _ முக்கால் கிலோ
தயிர் _ முக்கால் கப்
வெங்காயம் _ பெரியதாக ஒன்று
தக்காளி _ அரிந்தது 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் _ மூன்று
பட்டை _ இரண்டு இன்ச் அளவு
ஏலக்காய் _ ஒன்று
மல்லி,புதினா தழை _ சிறிதளவு
எண்ணெய் _ 5 தேக்கரண்டி
நெய் _ 2 தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் _ முன்று சிட்டிகை
எலுமிச்சை பழம் _ ஒன்று
*** அரைத்து கொள்ள ***
தேங்காய்த்துருவல் _ அரை கப்
வெள்ளை மிளகுத்தூள் _ 4 தேக்கரண்டி
வெள்ளை மிளகுத்தூள் _ 4 தேக்கரண்டி
முந்திரி _ 10
பாதாம் _ 15
*** செய்முறை ***
மட்டனை நன்கு சுத்தம் செய்து கழுவி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.பச்சைமிளகாயை கீறி வைத்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்தவைகளை நைசாக அரைத்து கொள்ளவும்.
குக்கரில் தயிர், அரைத்த மசாலா,எலுமிச்சை பழம் தவிர்த்து மற்றுமுள்ள அனைத்து பொருட்களையும் கலந்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி விட்டு அடுப்பில் வைத்து குக்கரை மூடி ஸ்டீம் வந்ததும்,வெய்ட் போட்டு குறைந்த தீயில் பதினைந்து நிமிடம் வைத்து இறக்கவும்.
பிறகு ஸ்டீம் விட்டதும் குக்கரை திறந்து பார்த்தால் தண்ணீர் லேசாக விட்டிருக்கும்.அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயிலேயே வைத்து நன்கு பிரண்டு சுற்றிலும் எண்ணெய் மினுமினுக்க வந்ததும்,அடுப்பை அணைத்துவிட்டு எலுமிச்சை சாறு பிழிந்து பிரட்டி விட்டு மூடி விடவும்.
சுவையான ரிச்சான வெள்ளை மட்டன் குருமா தயார்.
இதை நெய் சாதத்துடன் மட்டுமே சாப்பிட நன்றாக இருக்கும்.
குறிப்பு:-)) இதற்க்கு மட்டன் நன்கு எலும்புடன் கூடிய தொடை சதைக்கறியாக இருந்தாலே நன்றாக இருக்கும். மிகவும் வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.கசகசா விரும்புவர்கள் அதை ஒரு ஸ்பூன் சேர்த்து கொண்டு பாதாம் அளவில் பாதியை குறைத்து அரைத்து கொள்ளலாம்.கசகசாதான் அந்த காலத்தில் சேர்த்தனர்.இங்கெல்லாம் நான் கசகசா உபயோகபடுத்துவதில்லை என்பதால் பாதாம் சேர்த்து கொள்கிறேன்.





