இந்த முறையில் செய்யும் பருப்பு சாதம் எங்கள் ஊர்களில் வயதுக்கு வந்த பெண் வீட்டில் அன்று இந்த சாதத்தை நிறைய செய்து ஒரு பெரிய மரவையில் பரவலாக வைத்து நடுவே பெரிய முட்டை ஆம்லெட் போட்டு அதில் வைத்து தெரு பிள்ளைகள் அனைவரையும் கூப்பீட்டு உட்கார்ந்து எல்லோரையும் ஒன்றாக சாப்பிட சொல்லுவார்கள்.சுட சுட இருக்கும்.இதெல்லாம் நான் சின்னபிள்ளையாக இருக்கும் போது....
இப்போது ஒரு சில வீடுகளில்தான் இந்த பழக்கம் உண்டு.காலம் செல்ல செல்ல எல்லாமே மாறிவருகின்றதே.... என் குழந்தைகளுக்கு இதை மாதம் ஒரு முறையாவது செய்து கொடுத்துவிடுவேன்.
இப்போது அதன் செய்முறை கீழெ.... தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி _ ஒரு டம்ளர்
துவரம்பருப்பு _ ஒரு கை நிறைய
வெங்காயம் _ ஒன்று
தக்காளி _ பாதியளவு
பச்சைமிளகாய் _ ஒன்று
இஞ்சி,பூண்டு விழுது _ ஒரு தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் _ அரை தேக்கரண்டி
கரம்மசாலாத்தூள் _ ஒரு தேக்கரண்டி
தேங்காய் விழுது(அல்லது)
தேங்காய் பால் பவுடர் _ இரண்டு தேக்கரண்டி
புதினா தழை _ சிறிதளவு
பட்டை _ ஒரு இன்ச் அளவு
எண்ணெய் _ 3 தேக்கரண்டி
*** செய்முறை ***
அரிசியையும் துவரம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து நன்கு கழுவி விட்டு ஊறவைக்கவும்.
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை அரிந்து கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும்,பட்டை போட்டு உடனே வெங்காயம் ,தக்காளி,பச்சைமிளகாயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
நன்கு வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
பிறகு தூள்களை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு தேங்காய் விழுதையும்(தேங்காய் பால் பவுடராக இருந்தாலும்..) புதினாவையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பும் சேர்த்து கொதி வந்ததும் அரிசி,பருப்பை தண்ணீர் இல்லாமல் சேர்க்கவும்.
நன்கு கொதித்து தண்ணீர் சுண்டும் நிலையை அடைந்ததும் குக்கரை மூடி வெய்ட் போட்டு குறைந்த தீயில் பத்து நிமிடம் வைத்து இறக்கவும்.
ஸ்டீம் வீட்டதும் குக்கரை திறந்து ஒரு முறை அடி வரை கிளறிவிட்டு பரிமாறவும்.
சுவையான சத்தான பருப்பு சாதம் தயார்.குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.செய்வதும் எளிது.
அன்புடன்,
அப்சரா.






