Showing posts with label தவமின்றி வரம். Show all posts
Showing posts with label தவமின்றி வரம். Show all posts

Tuesday, February 1, 2011

***தவமின்றி வரம்***


 பளப்பளப்பான மின் விளக்கின் வெளிச்சங்கள்.பரபரப்பாக அங்கும்,இங்குமாக நடக்கும் மனிதர்கள்.இவைகளை கண்டாலே கோப,கோபமாக அவளுக்கு வந்தது.அவற்றை எல்லாம் முறைத்து பார்த்த வண்ணம் மண்டபத்தின் பால்கனியில் நின்று கொண்டிருந்தால் அனு. 
 “இங்க பாருமா அனு ரொம்ப நேரம் கண் விழிச்சிட்டு இருக்க கூடாது. நீ போமா போய் படுத்து தூங்கு.” அப்பாவின் அன்பு கட்டளை வரவே ரூமை நோக்கி  போனாள்.”அட பாவமே….நீ இன்னுமாடீ தூங்காம இருக்க.ஏம்மா லதா இங்க வா எங்கே உன் தோழியை விட்டுட்டு போய்ட்ட.பாரு நாளைக்கு மணப்பெண்ணா உட்கார வேண்டிய பொண்ணு தூங்காம உலாத்திட்டு இருக்கா.தூங்கினாதானே மணமேடையில் முகம் பளிச்சின்னு இருக்கும்.நீ கொஞ்சம் அவளை அழைச்சிட்டு போமா…என்ன….” என்று சொன்ன அம்மாவை முறைத்து பார்த்துக் கொண்டே லதாவுடன் அனு ரூமுக்கு சென்றாள்.

லதாவும் குரலை உயர்த்தியவளாய்,”ஏண்டி இப்படி இருக்க இன்னும் நீ  உன்னை மாத்திக்க முயற்சி பண்ணவில்லையா….?அம்மா,அப்பாவுக்கு கல்யாண வேலை ஒரு டென்ஷன்னா நீ மூஞ்சை தூக்கி வச்சிகிட்டு நடந்துக்குறது அதை விட அவங்களுக்கு டென்ஷன் தான் டீ அனு.ப்ளீஸ்….புரிஞ்சுக்கோ டீ….”என்று சொன்னவளை “நானும் இதையே தான் சொல்றேன்.இந்த கல்யாணம் என்றாலே எல்லோருக்கும் டென்ஷன் தான்னு.யாரு புரிஞ்சுக்கிறீங்க”என்று சொல்லி அனு மடக்க பார்த்தாள்.

உன்னிடம் சொல்லி சொல்லி எனக்கு அலுத்து போச்சு அனு.மாப்பிள்ளையோட ஃபோட்டோவும் பார்க்க மாட்டேன்னுட்ட,ஃபோன் பேச அவர் கூப்பிட்டா அதையும் மறுத்துட்ட.இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை ஊர்வலம் முடிஞ்சு வருகின்றபோதும் கூப்பிட்டேன்.அப்போதும் வேண்டாம் என்னை விட்டுடுன்னு சொல்லிட்ட.மாப்பிள்ளையை பார்க்க ரொம்ப நல்ல விதமாய் தெரியுது அனு. அவர்ட்ட பேசி கூட பார்த்துட்டேன்.பேச்சும் மற்றவர்களை கவர்வது போல் தெரியுது”என்று சொன்னவளை அனு ஒரு பார்வை பார்த்து விட்டு “சரி நான் படுக்க போறேன் தலை வலிக்குது.நீ படுக்கிறியா என்ன?”என்றாள். “இல்லடீ…நீ நல்லா படுத்து ரெஸ்ட்டு எடு நான் அம்மாட்ட கொஞ்சம் ஃபோன் பேசிட்டு நாளைக்கு மண்டபத்திற்க்கு வருவதற்க்கான வழியையும் அவங்களுக்கு சொல்லிட்டு வரேன்.”என்று சொல்லி விட்டு பெருமூச்சு விட்டவளாய் லதா வெளியேறினாள்.

கதவை தாளிட்டு விட்டு படுத்தவளுக்கு தூக்கம் வரவில்லை.மனது நிறைய யோசனைகளும்,,படப்படப்பும் தான் அலைந்துக் கொண்டிருந்தது.அப்பா அம்மாவிற்க்கு நான்கு பெண் பிள்ளைகள்.அனு கடைக்குட்டி பெண்.எல்லோருக்கும் செல்லம் தான்.அம்மா,அப்பாதான்உலகம் என்றே இருப்பவள்.இதோ இந்த லதா தான் இவளின் சிறுவயது முதற்கொண்டு இருக்கும் உயிர் தோழி.இவர்களை தவிர வேறு யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டாள்.பண்ணிரண்டாம் வகுப்பு முடித்து கல்லூரி போக பயந்தவளாய் அப்பாவிடம் தபால் மூலம் பி.ஏ.படிப்பதாக தெரிவித்தாள்.ஒரு வருடம் கழிந்தபின் தான் உறவுக்காரர் மூலம் சுனாமியாக இந்த கல்யாண வரன் அவள் வாழ்வில் வரவே அன்று கலங்கியவள் தான் அனு.

அவளை சொல்லி ஒன்றுமில்லை.அவளின் அக்காக்கள் மூவரின் கல்யாணமும்,அதன் பிறகு அவர்களின் வாழ்க்கையும் பார்த்து கொண்டிருப்பவள்.ஒவ்வோருவரின் திருமணத்திலும் அப்பா படாத கஷ்ட்டமில்லை.அம்மா அழுகாத நாளில்லை.முதல் அக்கா படும் கஷ்ட்டங்கள் கேள்விப்பட்டதுதான்.மற்ற இருவரின் நிலையும் இன்றும் அழுகையும்,போராட்டமாகவும் தான் ஓடி கொண்டிருக்கிறது.அதையெல்லாம் பார்த்து முடிவு பண்ணவள்தான்,என்னால் எனது அப்பாவும் ,அம்மாவும் கல்யாணம் என்ற பேரால் கஷ்ட்டபட கூடாது என்று.ஆனாலும் அப்பா ”பெங்களூரில் வேலை செய்யும் மாப்பிள்ளை,அருமையான சம்பந்தி உங்க பொண்ணுக்கு எது செய்வீர்களோ தெரியாது ஆனால் என் பிள்ளை வரதட்சனையோ,சீரோ ஏதும் கேட்காதேம்மா என்று சொல்லி விட்டான் எனவே நான் எதுவும் எதிர்பார்க்கவும் இல்லை என்று  முகமலர்ச்சியோடு கூறுகின்றார்.  கொடுத்து வைத்தவள் மா நீ” என்று நிச்சயம் செய்து விட்டு வந்து விட்டார்.அன்று ஆரம்பித்தவள் தான்.ஒழுங்காக சாப்பிடுவதில்லை,தூங்குவதும் இல்லை,சந்தோஷமும் இல்லை.

ஏனோ பேச்சு சத்தம் கேட்டவளாய் நினைவுகள் கலைந்து எழுந்து உட்கார்ந்தாள்.பெரிய அக்காவும் லதாவும் வந்திருந்தார்கள்.கதவை திறந்து விட்டாள். “லதா கொஞ்சம் அனுவை ரெடி பண்ணி விட்டு நீயும் ரெடியாகி விடுமா…நேரம் ஆகிட்டா அப்பா வேற கத்துவார்.நான் இங்கு அடிக்கடி வந்து பார்த்துக்க முடியாது.அப்புறம் என் வீட்டுக்காரரும்,மாமியாரும் என்னை கவனிக்க ஆளேயில்லை ஒருத்தருக்கும் மரியாதையே இல்லை. என்று ஆரம்பித்து விடுவார்கள்.”என்று புலம்பி கொண்டே போய் விட்டால்.


இதோ மணமேடை எல்லா சடங்கு சம்பிரதாயங்களுடன் மாப்பிள்ளை தாலியும் கட்டி விட்டார்.அனுவின் காதில் லதா கிசுகிசுத்தாள்.”இப்பொழுதாவது மாப்பிள்ளையை பாரேன் டீ அனு.”அப்போதும் எந்த மாற்றமும் இல்லாமல் சாதாரணமாகவே இருந்து கொண்டிருந்தாள்.விருந்து உபசரிப்பும்,உற்றார்,உறவினர்,நண்பர்களின் வாழ்த்தும் நல்லபடியாக முடியவே,அனுவின் மாமியார் பெண்ணை அனுப்பிவையுங்க சம்பந்தி என்று சொன்னார்.அனுவிற்க்கோ படபடப்பாக இருந்தது.உடனே அனுவின் அப்பா கைய்யில் வைத்திருந்த பைய்யிலிருந்து பணகட்டை எடுத்து தட்டில் பூ,பழத்துடன் மாப்பிள்ளை,சம்பந்தி அருகில் வந்து நின்று ”என் மூன்று பெண்களுக்கும் நான் அப்போது உள்ள சூழ்நிலையில் ஐம்பதாயிரம் ரொக்க பணமும்,ஐம்பதாயிரத்துக்கு சீரும் செய்தேன்.நீங்கள் கேட்கவில்லையென்றாலும் என் கடைசி பெண்ணுக்கும் அதை சேர்த்து மொத்த பணமாய் இந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை வைத்து கொடுக்கின்றேன் ஏற்றுக்கொள்ளுங்கள்”என்று நீட்டினார்.இதை கேட்ட அனுவிற்க்கு அப்போது வந்த எரிச்சலுக்கு அளவே இல்லாமல் இருந்தது.பல்லை கடித்துக் கொண்டு பக்கத்தில் நிற்க்கும் லதாவை பார்த்து கொண்டிருந்தாள்.

தட்டையை வாங்காமல் மாமனாரின் கைய்யை பிடித்த மாப்பிள்ளை ரமேஷ் “மாமா இதையெல்லாம் கொடுத்தால் தான் உங்கள் பெண்ணை நன்றாக பார்த்துக்கொள்வேன் என்று நினைக்கிறீர்கள் என்றால் அந்த எண்ணத்தை அழிச்சிடுங்க.எனக்கு இதையெல்லாம் விட பெரிய சொத்தாக உங்கள் பெண்ணை தந்திருக்கின்றீர்கள் அது போதும் மாமா.ஒரு பொக்கிஷமாக என்னருகில் வைத்து நல்லபடியாக பார்த்து கொள்கிறேன்.இனி அவளுக்கு எல்லாம் நான்தான்.என்னை உங்கள் மகனாக நினைத்துக் கொள்ளுங்கள்.சரியா….கிளம்பட்டுமா மாமா…அத்தை” என்று சொன்னவரை அப்போதுதான் அனு நிமிர்ந்து பார்த்தாள்.அவளையும் அறியாமல் கண்ணீர் வந்தது.அப்பா,அம்மாவின் முகத்தில் முதன் முதலில் ஆனந்த கண்ணீர் வருவதை பார்த்தாள்.நிச்சயமாக நான் கொடுத்து வைத்தவள்தான்.என்னால் எனது பெற்றோர் வருத்தமோ,கஷ்ட்டமோ படவில்லை.இவர் எனக்கு தவமின்றி கிடைத்த வரம் தான் என்று எண்ணிகொண்டே,எல்லோரிடமும் சொல்லி விடை பெற்று கொண்டு, ஆனந்த கண்ணீர் மல்க கணவரின் கையை இருக பற்றிக் கொண்டு காரில் ஏறினாள்.


அன்புடன்,
அப்சரா.

Admin Control Panel

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out