நாம் எங்கேயாவது வெளியே போய் விட்டு வரும்போதோ... அல்லது திடீர் விருந்தாளிகள் இரவு வந்திருக்கின்றார்கள் என்றோ இருக்கும் சூழ்நிலையில் இட்லி மாவோ...,அல்லது மாவுதான் கடையில் விற்க்குமே உடனே அதை வாங்கியோ இரண்டு முறையாக இட்லியை வேக வைத்து எடுப்பதற்க்குள் இந்த சாம்பாரை செய்து, கூடவே ஒரு தேங்காய் சட்னியும் செய்து வைத்து விடலாம்.இங்கு நான் செய்து காட்டியிருக்கும் முறை அந்த கால செய்முறையாகும்.அதிக நபர்கள் உள்ள கூட்டு குடும்பமாக அப்போதெல்லாம் வாழ்ந்து வந்ததால் சாம்பாரை நீட்டி வைக்க இப்படி செய்திருக்கின்றார்கள். இப்போது அதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
*** தேவையான பொருட்கள் ***
பாசி பருப்பு _ ஒரு கப்
சிறிய வெங்காயம் _ 15
தக்காளி ( பெரியதாக ) _ ஒன்று
பச்சை மிளகாய் _ ஒன்று
மிளகாய்த்தூள் _ இரண்டு தேக்கரண்டி
மஞ்சள்த்தூள் _ ஒரு தேக்கரண்டி
மல்லிதழை _ சிறிதளவு
இட்லி மாவு _ இரண்டு மேசைக்கரண்டி
*** தாளிக்க ***
எண்ணெய் _ 4 தேக்கரண்டி
கடுகு _ ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் _ இரண்டு
கறிவேப்பிலை _ ஒரு கொத்து
பெருஞ்சீரகம்( சோம்பு ) _ கால் தேக்கரண்டி
*** செய்முறை ***
பாசி பருப்பை நன்கு கழுவி விட்டு குக்கரில் போட்டு வேகும் அளவிற்க்கு தண்ணீர் ஊற்றி மஞ்சள்த்தூள், பாதி மிள்காய்த்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து சிம்மிலேயே வைத்துக் கொண்டு கொதி வருவதற்க்குள்ளாக வெங்காயத்தையும் உரித்து விட்டு கழுவி நீளவாக்கில் அரிந்து அதில் பாதியையும்,தக்காளியையும் பொடியாக அரிந்தும்,பச்சைமிளகாயை கீறியும் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விட்டு இறக்கவும்.(அவசரம் இல்லையெனில் பாத்திரத்திலேயே வேகவிடலாம்.)
பிறகு குக்கரை திறந்து அடுப்பில் வைத்து தேவைக்கேற்ப சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டு கொதி கொதிக்கவிட்டு இறக்கவும்.அதற்க்கிடையில் சோம்பை ஒன்றிரண்டுமாக நுணுக்கியும்,இட்லி மாவை சிறிது தண்ணீரில் கரைத்தும் வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை தாளித்து மீதி அரிந்த வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கிவிடவும்.பிறகு மீதி மிளகாய்த்தூளையும் சேர்த்து தாளித்து சாம்பாரை ஊற்றவும்.
பின்பு கரைத்து வைத்திருக்கும் இட்லி மாவை ஊற்றி கலக்கி விட்டு ,மல்லி தழையை அறிந்து சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.
இட்லி,தோசைக்கு இந்த சாம்பார் மிகவும் நன்றாக இருக்கும்.